February 24, 2015

இமைத்திட

இமைத்திரை விலக்கி
இருவிழி நகர்த்தி
இதமாய் பார்க்கிறாய்.
இமைத்திட மறக்கிறேன்.
இன்னொருமுறை பிறக்கிறேன்.

எதையும்

உனக்காக
மட்டும் நான்
இதயம் திறப்பேன்
எதையும் துறப்பேன்.

கவிதை

நீ ஒரு
குறுங்கவிதை.
நீயற்ற வாழ்வோ
அர்த்தமில்லா
வெறுங்கவிதை.

நினைவுப்பேழை

எடுக்க
எடுக்க
அடி காணமுடியா
நினைவுப் பேழைக்குள்
நீயும் நானும்!

மனக்கேதம்

என்
மனக்கேதம் தீர
உன்
மலர்ப் பாதம்
போதும்.

எங்கே போனது

எதிர் வரும் காதல் முல்லையே!
எனக்கெதிர் காலம் இல்லையே!

எனை நீங்கி தூரம் போகிறாய்!
எனக்குள்ளே பாரம் ஆகிறாய்!
தினந்தோறும் பார்வை
தந்து நெஞ்சம் தாக்கினாய்!

பார்த்துப் போன கண்கள் இங்கே
காணவில்லையே!
கோர்த்துப் போன கைகள் இங்கே
நீளவில்லையே!

பக்கம் வந்த பெண்மை இன்று
எங்கே போனது?
லட்சம் பூக்கள் கோர்த்த மாலை
என்ன ஆனது?

என் வானே நீதானே!
எங்கே வாழ்வேனே?

விண்மீனே நொந்தேனே!
எங்கே போவேனே?

February 15, 2015

உண்மையா

சில சமயங்களில்
உன்
இமைகளே உனைப் பார்த்து
இமைக்க மறக்கின்றதாமே.

உண்மையா?

உண்மையாகத்தானிருக்கும்.

முக்தி நிலை

பிரபஞ்ச பேரழகே!

தயவுசெய்து
தயவுசெய்து
மறுபடியும்
பிறக்காதே.

பிறந்து பிறந்து
என்னை நீ
வறுக்காதே.

முக்தி நிலை
அடைந்துவிடு
அல்லது
மோட்சத்தில்
கலந்து விடு.

February 10, 2015

தேசிய கீதம்

உனக்காகப் பாடும்
கவிதைகள் யாவும்

எனக்கென்னவோ
தேசிய கீதம்தான்.

உன்னிடத்தில்

உன்னை பார்த்ததில்லை.

உன்னோடு பேசியதில்லை.

இருந்தாலும் - என்
இருதயம்
உனக்காக
உருகித் தவிப்பதை
என்னென்று சொல்ல?

எடுத்துக் கொடுக்கும்படி
இருதயம்
இருந்திருந்தால்
எத்தனை நன்றாய்
இருந்திருக்கும்?

என்னைவிட்டு எடுத்திருப்பேன்.
உன்னிடத்தில் கொடுத்திருப்பேன்.

மழைக்காலம்

மழைக்காலம்.

மண்ணில் இல்லை.
விண்ணில் இல்லை.

கன்னி உன்னால் - என்
கண்ணில்.

February 8, 2015

சிருஷ்டி

உன்னுடைய
'நான்' இலிருந்து
என்னுடைய
'நான்'
கவிதையை
சிருஷ்டிக்கிறேன்.

விழிகள்

உன்
நினைவுகளில்
அமிழும்
புரியா பொழுதுகளில்
விழிகள்
வழிகின்றன.

தரிசனம்

இன்றைக்கும்
வரவில்லை நீ.

அது சரி.

வருவது
உனக்கு தினசரி.
எனக்கு தரிசனம்.

தேடல்

நிகழ்ந்த
யுகயுகமாய்
என்
நிரந்தர தேடல்
நீதானடி.

பார்வைக் காற்று

உரசிப் போகும்
பார்வைக் காற்றினில்
உள்ளம் பறிப்பவள்
நீ.

ப்ரக்ஞை

என்
ப்ரக்ஞையின்
அடிவாரத்தில்
உன் முகமே
பதிந்து
கிடக்கிறது.

தருணங்கள்

அழகான மயில்
அருகாமையில்
என மகிழ்ந்து

பேசாது பேசி
ஜீவித்திருந்த

தாமரை
தருணங்கள்
திரும்பி வாரா.

உனதோரம்

கரையோரம் தான்
அலைகள்.
இருந்தும்
கரை சேர்வதில்லை.

உனதோரம் தான்
நானும்.
இருந்தும்
உனை சேரவில்லை.

வார்த்தைகள்

தினம் உனை
பார்க்கையில்
நாக்கு நுனியில்
வார்த்தைகள்
துடிக்கின்றனவேயன்றி
வெளிவருவதில்லை.

February 2, 2015

மனக் கண்ணாடி

முன்வந்து நிற்கவில்லை
என்றாலும்
என் மனக் கண்ணாடியில்
உனதுருவே தான் தெரியும்
எனதுயிரே.