July 28, 2013

காதலென்பது


காதல் என்பது
கடவுள் - எனச் சொல்கிறது
மெய்ஞானம்.

காதல் என்பது
கவர்ச்சி - எனச் சொல்கிறது
விஞ்ஞானம்.

காதல் என்பதை
காதல் எனச் சொன்னது
நீ மட்டும்தான்.

சிரிப்பு

எந்தப் பூவும்
சிரிப்பதில்லை...

உன்னைத் தவிர.

தவிர


உனக்குப் பிடித்தவை
அனைத்தும்
எனக்குத் தெரியும்.


என்னை உனக்குப்
பிடிக்குமா
என்பதைத் தவிர.

பேசாக் காதல்

கல்லூரிக் காலம் முடிந்து
ஆறு ஆண்டுகள்
உனைக் கடைசியாய்
கண்ட நொடிகழிந்து
மூன்று ஆண்டுகள்
கடந்து போயின.

விழியால் பேசிக்கொண்டு
மொழியை மறந்து நின்ற
இறந்தகாலம் எண்ணிமாய்ந்து
மறக்க மறுக்கிறது
காதல் மதங்கொண்ட
மட மனயானை.

உனக்குத் திருமணமானதையும்
வாழ்க்கைத் தேரேறி
துணையோடு நீ போனதையும்
நாள், கிழமை,
நேர சாட்சிகளோடு
நம்பச் சொல்கின்றன
என் நட்பு வட்டங்கள்.

அந்த
வட்டங்கள் சொல்வதே
திட்டவட்ட உண்மையெனும்
நம்பிக்கை மீதான
அவநம்பிக்கையோடு
இப்படி யோசிக்கிறது
யதார்த்தம் மீறி
என் மனம்.

"உன்னோடு
ஒரு எழுத்தேனும்
பேசியிருக்கலாமோ...?"

விடுதலை அட்டை


கிளி ஜோதிடா...

என்று கேட்பாய்...?

கிளியின் விடுதலை
சொல்லும் அட்டை
எடுக்கச் சொல்லி.

கனவாய் போன கனவு


சிறுகதை பத்து
கவிதைகள் எழுபது
கதைகள் முப்பது
எழுதி முடித்து...

எழுத்துத் தேரில்
இறுமாப்புடனே
பவனி வந்து...

ஆயிரமாய் ஆண்கள்
லட்சமாய் பெண்கள்
வாசகர்களாகி
வந்து குவிந்து...

வீடுகள் மூன்று
கார்கள் இரண்டு
தோட்டம் ஒன்று
வாங்கிச் சேர்த்து...

இலக்கிய சிங்கம்
எழுத்துச் சிற்பி
கவிதை கோபுரம்
ஞான பீடம்
விருதுகள் வாசலில்
வரிசையாய் நிற்கையில்...

அம்மா அடிக்க...
வலியில் துடித்தெழ...
கனவாய் போனது
கனவு.

July 20, 2013

வானம் தொட்டுப் போன வாலி






அயோத்தி புருஷனை
அருகில் காட்டியவன்.
பாண்டவர் பூமியில்
நம்மோடு வசித்தவன்.
நினைவு நாடாக்களால்
நம்மை கட்டியவன்.
வாரந்தோறும் வந்து - நம்
சிந்தைதோறும் சேர்ந்தவன்.
எத்தனையோ பேருக்கு
இரங்கற்பா பாடியவன்.
இவன் பாடும்
இரங்கற்பா கேட்பதற்கே
இறந்து போகலாம்.
இப்பூவுலகம்
மறந்து போகலாம்.
உயிர் பறித்து
உயிர் பறித்து
உயிர் சலித்த எமனுக்கு
கவி சொல்ல எவனுமே
இல்லையென்று
இவனை அழைத்துக்
கொண்டானோ? - எப்படித்தான்
அதற்கு மனம்
கொண்டானோ?

கவிதைக்கெனவே
வாழ்ந்துவிட்ட வாலி.
கலைமகள்
தொலைத்துவிட்ட தாலி.