November 26, 2014

முக்தி

பொன்மேகம் போல
மென்தேகம் கொண்டு
பெண்மேகம் நீயும்
நடக்க

வெண்மேகம் கரைந்து
வெகுவேகமாய் இறங்கி

உன்னை நனைத்து
உலகம் சலித்து

அடைகிறது
முக்தி.

November 25, 2014

பூ

கண்களில் தவழும்
புன்னகையாலே
பாட்டெழுதும்
பூ
நீ.

தனியாய் இருக்க

தனிமையைக் கூட
தள்ளிவிட்டு
தனியாய் இருக்க
உன்னால்
பழகிக் கொண்டேன்.

இறுக்கமாய்

உன் மூலமாய்
எனக்கு அறிமுகமான
காதல்
என்னோடு தினம்
பேசிக் கொண்டிருக்கிறது.

நீ மட்டும் ஏனோ
பேச மறுக்கிறாய்.

இன்னமும்
இறுக்கமாய்
இருக்கிறாய்.

November 22, 2014

முகவரி

உண்மையைச் சொல்.

இரக்கமில்லாமல் - என்
இதயத்தின் முகவரியை
காதலுக்கு
காட்டிக் கொடுத்தவள்
நீதானே.
 

November 21, 2014

என்ன கேட்பேன்

எந்த தெய்வமோ
எதிரே தோன்றி
என்ன வரம் வேண்டுமென
என்னைக் கேட்டால்

உன்னை அன்றி
நான் என்ன கேட்பேன்
தேவதையே?

November 18, 2014

நிழல்

உன்னைப்
போலவே
அழகாய்
இருக்கிறது

உன்
நிழலும்.
  

November 12, 2014

திக்குகள்

இடப்பக்கம்
வலப்பக்கம்
மேல்பக்கம்
கீழ்பக்கம்

எல்லா திக்கும்
நீதான்.

எப்போது வருவாய்
என் பக்கம்?

காத்திருக்கும்  இதயம்
காலமெல்லாம் படபடக்கும்.
 

நானே

உன்னால்
நானே எனக்கு
ஆச்சரியமானேன்.

காதல் பள்ளத்தாக்கில்
தடுக்கி விழுந்து
கால் சரியலானேன்.
 

கவிதை நூல்

சொல் கடந்த உன்
செளந்தர்யத்தை
சொற்களுக்குள்
அடக்க முயன்று
தோற்கிறேன்.

முடிந்தவரை
கவிதை நூல்
நூற்கிறேன்.
 

அப்போதெல்லாம்

காதல் தவறு
என்றே
நினைத்திருந்தேன்.

அப்போதெல்லாம்
உன்னைப்
பார்க்கவில்லை.

தோன்றவில்லை

என் முழுமனதை
உன்னிடத்தே
சொல்லுகின்ற
கவிதை - இன்னும்
தோன்றவில்லை என்றே
தோன்றுகிறது.

November 10, 2014

மனக்கதவு

என் மனக்கதவு
திறந்து கிடக்கிறது.

நீ
ஏனோ இன்னும்
ஜன்னலைக் கூட
திறக்கவில்லை.

November 8, 2014

மாயப்புறா

என்
மனம் என்னும்
மாயப்புறா
உன்
வனம் சுற்றியே
பறக்கிறது.

அதற்கு
விழி காட்டு
வழி காட்டு.

கண்வலி

கடவுள் வந்து
சொன்னாலும்
பார்க்க மாட்டேன்
உன்னை
கண்வலியோடு.

என் வலியை
தாங்கிக் கொள்வேன்.
உன் வலியை
தாங்க மாட்டேன்.
 

November 7, 2014

நான் என்பது

பார்வை கொண்ட
ஒவியமே!

நீ பார்க்கும் போது
நான் என்பது ஏது?

நீ விலகும் போது
நான் வாழ்வது ஏது?

எல்லாம் நீ

அங்கும் நீ
இங்கும் நீ
எங்கும் நீ.

நீயாகவும் நீ
நானாகவும் நீ.

எல்லாம் நீ
எல்லாமும் நீ.

எனில்
ஏது இங்கே நான்?

திருஷ்டி

உனக்குத்
தெரியுமோ
தெரியாதோ.

உன் கண்ணே
உன் அழகைப்
பார்த்து
கண் வைக்கிறதாம்.

என் கண்ணே!
கவனமாய் இரு.

கண் திருஷ்டி
பட்டுவிடப்
போகிறது.

November 5, 2014

தொடுவானம்

தொடுந்தூரம்
நீயிருந்தும்
எனக்கு நீ
தொடுவானம்தான்.

November 4, 2014

நீ

நீ
கால் கொண்டு
நடந்து வரும்
பூச்செண்டு.

கைகோர்த்து
கடந்து போகும்
பூங்கொத்து.
 

பயங்கரவாதம்

என்
மன எல்லை தாண்டி
ஆக்கிரமிப்பு
செய்கிறாய்.

காதல்

எல்லை கடந்த
சுகமான
பயங்கரவாதம்
என்பதை

சொல்லாமல்
சொல்கிறாய்.

பூவிழி வாசல்

உன்
பூவிழி வாசலில்
நான்
காத்திருப்பது
கண்டும்
காணாமல் போகிறாய்.

November 3, 2014

கண்ணில் மழைக்காலம்

உன்
வானத்திலிருந்து வந்து

இருதயத்தில்
இறங்கிவிட்டது
இடி.

இரு கண்களில்
பிறந்துவிட்டது
மழை.

காதல் ஒரு
சூறாவளிதான்.

காதலிப்பவருக்கு
தீராவலிதான்.
 

விலகாதே

என்னை விட்டு
விலகி நீ
போகிறாய்.

என்னை விட்டு
விலகி நான்
போகிறேன்.
 

அழகானவள்

பிரபஞ்சம் முழுவதும்
தேடிப்பார்த்துவிட்டேன்.

உன்னை விட
அழகானவள்
நீதான்.