December 22, 2014

எனக்காக... எனக்காக.. எனக்காக

எனக்காக எழுந்து கொண்டு
எனக்காக நடந்து வந்து

என் எதிரே மலர்ந்து நின்று
என் கரம் பற்றிக் கொண்டு

எனக்காக இதழ் விரித்து
என் விழி பார்த்து சிரித்து

என் வாழ்வை வாழ்த்திவிட்டு
என்னிலிருந்து என்னை எடுத்துக் கொண்டு

நகர்ந்து போயிற்று
நிலவு.

என்னுள்
ஏதோ ஆயிற்று
என்பதாய்
நினைவு.

வாழ்த்துக்களுக்கு நன்றி
சொல்ல
வார்த்தைகளுக்கு எங்கு
செல்ல.

December 21, 2014

வாழ்த்து

தேவதையின் வாழ்த்தினிலே
தேங்கிக் கிடக்கிறது
தேகத்துள் மனது.

December 17, 2014

உனை பிரிந்தால்

இமை மேலே சுமை போலே
உன் நினைவு நடக்கிறதே.

நமை காணும் மழை மேகம்
நனைக்காமல் நகர்கிறதே.

உயிரினிலே ஒரு பாதி
உனைத் தேடி அலைகிறதே.

மறுபாதி உயிர்கூட
மறந்தென்னை பிரிகிறதே.

உயிர் பிரிந்த உடலினிலே
உயிர் வாழும் ஒரு நிமிடம்.

உனை பிரிந்தால் எனதுயிரும்
உடனடியாய் விலகிவிடும்.

December 12, 2014

மெளனம்

வெளிவராத உன்
வார்த்தை - காயம்
செய்கிறது.

நான்
விரும்பாத உன்
மெளனம்  - என்னை
கொல்கிறது.

மெளனம் கலைத்து
காயம் அகற்று.

December 8, 2014

சாட்சி

வானத்து
தேவதைகள்
பூமிதனில்
வாழ்கிறார்கள்
வலம்
வருகிறார்கள்
என்பதற்கு
நீயே சாட்சி.
 

December 6, 2014

யார் சொல்வதோ

நான் வந்து
பேசினால்
தவறாய் நீ
நினைப்பாயோ
என
நான் நினைக்கிறேனோ?

நீ வந்து
பேசினால்தான்
நான் பேசுவேன்
என
நீ நினைக்கிறாயோ?

கலங்கி கலங்கி
மனம் நினைக்கிறது.
கண்ணீர் எனை
தினம் நனைக்கிறது.

அலங்காரம்

பூக்களால் ஆன
உன்னை - தமிழ்
பாக்களால் ஆன
மட்டும் நான்
அலங்கரிக்கிறேன்.
 

ரோஜா

எங்கோ மலர்ந்த
ரோஜா
என்னெதிரே
பூத்திருக்கிறது.

பாக்கியம்

உன்
இந்திர அழகை
சுந்தரத் தமிழால்
பாடுவது என்
பாக்கியம்.

பாடுவதால்
வாழ்கிறேன் - என்
பாவங்களைப்
போக்கியும்.
 

December 4, 2014

பெண்மயில்

தோகை இல்லாத
பெண்மயில்
உலகினில்
உண்டா?

உண்டே - அதான்
நீயிருக்கிறாயே.