August 30, 2014

கவிதை கேட்காதே

அழகிய தமிழ்
மகளே...

கவிதை கேட்காதே
இனிமேல்.

ஆளுயரக் கண்ணாடி முன்
அலங்காரமாய் நின்று
படித்துக் கொள்.

August 29, 2014

நனைந்த பூமி

வானில்
மேகமில்லை
மின்னலில்லை
இடியுமில்லை
மழையில்லை

ஆனாலும்
என் கண்ணீரால்
பூமி
நனைந்து போயிற்று.

August 27, 2014

நீயும் கவிதையும்

நீ
உள்ளே
இருக்கிறாய்.

கவிதைகள்
வெளியே
இருக்கின்றன.

August 22, 2014

பூத்தது பூ

ஆடை மேலாடும்
பூவே!

அல்லி
அந்தி மந்தாரை
ஆவாரம்பூ
ஆம்பல்
சூரியகாந்தி
ரோஜா
ஜாதிமல்லி
மயிற்கொன்றை
பவளமல்லி
பாரிஜாதம்
செங்காந்தள்
செம்பருத்தி
மல்லிகை
முல்லை
தாழம்பூ
மனோரஞ்ஜிதம்
நீலாம்பரி
தாமரை

இதில்
எந்தப் பூ பூத்ததோ
எனக்குள்ளே
தெரியவில்லை.

உன் மேல்
துப்பட்டா
என் மேல்
பட்டபோது.

என்னுயிரை
தொட்டபோது.

August 18, 2014

பொழுதுகள்

உன்னை காணாத
போதெல்லாம்

நாள் கடத்துவது
ஆள் கடத்துவதைவிட
கடினமாயிருக்கிறது.

August 17, 2014

முள்

உன் காலில்
குத்திய முள்
என் நெஞ்சில்
குத்திவிட்டது.

கொடுமைக்கார முள்
என்று ஒரு பக்கம்
கோபம்.

கொடுத்து வைத்த முள்
என்று மறு பக்கம்
தாபம்.

August 16, 2014

சிறு தூறல்

என் மனது
என் வசம் இல்லை.
என்னை வந்து
பார்ப்பதும் இல்லை.

செண்பகமே - உன்
காலடி தேடி வந்து
காத்திருக்கு பாரடி
பெண்ணே.

திருமகள் நீயும்
வரும் நேரம்
நெஞ்சின் ஓரம்
மழைத்துளி கூடி
சிறு தூறல் தினம்
போடும்.

என்னை நீயும்
பாரம்மா.
என்னுள் நாளும்
போரம்மா.

August 15, 2014

விழி பேசும் மொழி

தேவ மாதே

முன் வந்து
முகம் பார்த்து
வாய் திறந்து
வார்த்தை கோர்த்து
சொல்ல வேண்டுமா
காதலை.

விழி பேசாததையா
மொழி பேசிவிடப் போகிறது.

உயிர்க்குரல் பாடும்
ஒரு ராகம் -  நீ
கேட்பாயா.

மனதினை தந்து
என் ஜீவன் - அதை
காப்பாயா.

விடுமுறை

மணிக்குயிலே

மூன்று நாள்
விடுமுறை
முடிந்து மீண்டும்
பாட வா.

நீ
வரும் வரை
கனம் தாங்காது
மனம் தூங்காது.

நல்ல கவிதை

உன்
பார்வை சொல்லும்
கவிதை தாண்டி

நல்ல கவிதையை
என்னால்
எழுதவே
முடியவில்லை.

ப்ரிய சகி

கன்னம் வழியும்
கண்ணீர் கூட
உன் பெயரே
எழுதுகிறது.

என்
கண்ணீரும்
உனக்கெனவே
அழுகிறது.

ப்ரிய சகி
ப்ரியம் தா சகி.

August 11, 2014

திரைப்பாடல் 2 - அம்மா அம்மா

 My Own lyrics for AMMA AMMA song from VIP movie

அம்மா அம்மா நீ வேண்டும் அம்மா
தெய்வம் கூட உனை வேண்டும் அம்மா
நிலவாய் வந்தாயே பிறையாய் தேய்ந்தாயே
நீல வானெங்கும் நிறைந்தே போனாய்

தாயே வரந் தருவாயே - என்றும் நெஞ்சில்
நிரந்தரம் நீயே

இங்கு எங்கேயும் கேட்கின்ற
என் கானம் நீ - நான்
எப்போதும் பார்க்கின்ற
வெண்மேகம் கொண்டாடும்
பொன் வானம் நீ

Stanza 1:
நீ தந்த பாசம்
பூ தந்த வாசம்
நெஞ்சில் நாளும்
நீங்காமல் வீசும்.

கனவோடு வாழ்ந்தாய்
களவாகிப் போனாய்
எங்கே சென்று
நான் தேடக் கூடும்.

ஏனோ எனை மறந்தாயே - காற்றில்
எங்கோ நீ கரைந்தாயே

தாயே நீயின்றி தண்ணீரும் தீயாகும்
வாழ்வும் தீவாகுமே

உன்னைக் காணாமல் கண்ணீரும் தள்ளாடும்
உள்ளம் திண்டாடுமே

Stanza 2:
அறியாத பிள்ளை
மலராத முல்லை
உன் மேல் கோபம்
எனக்கேதும் இல்லை

என் ஜீவராகம்
உன்னோடு சேரும்
கண்ணில் வேண்டாம்
கண்ணீரின் கோலம்

காலம் உயிர் பிரித்தாலும்
எந்தன் ஜீவன் உன்னுடன் வாழும்

இரவு வந்தாலும் விடிகாலை அது போகும்
எதுவும் நிலையில்லையே

நீயும் முன்னேறு தாயென்றும் உன்னோடு
நாளை உனதாகுமே

அம்மா அம்மா நீ வேண்டும் அம்மா
தெய்வம் கூட உனை வேண்டும் அம்மா
சுவாசம் போனாலும் பாசம் போகாதே
தேகம் போனாலும் நேசம் போகாதே

தாயே வரந் தருவாயே - கண்ணே
நீயே ஓர் வரந் தானே

ஒரு தெய்வம் தான் வந்து தாயானதே
ஒரு வேதம் தான் வந்து என் வீட்டில் எனக்கென்று சேயானதே.

திரைப்பாடல் 1 - ஏன் இங்கு நீ இல்லை

My own lyrics for PO INDRU NEEYAGA song from VIP movie...

ஏன் இங்கு நீ இல்லை
நான் இன்று நானில்லை
நேசம் உண்டானது
நெஞ்சம் துண்டானது
காலம் திண்டாடுது
காதல் வந்தாடுது.
லலலல லலலா.....

கண்ணாடி போல
அம்மாடி இருந்தேன்.
உன்னால நானும்
காத்தாடி ஆனேன்.

பூங்காற்று வந்து
பூ உன்னைத் தேடும்.
நீ வந்து சேர
புதுப்பாட்டு பாடும்.

கனவா நனவா
நான் காண்பது.
புயலா மயிலா
நீ என்பது.

மனதோடு சோகம்
மழையாகும் மேகம்
உனக்காக
உனக்காக
உயிர் கூட வேகும்
லலலல லலலா.....

August 2, 2014

ஆனந்தக் காற்று

விழி
வழி
வலி
தந்து விலகிப்
போகிறாய்.

நான் இளகிப்
போகிறேன்.

ஆனந்தக் காற்றே
என் மீது
வீச மாட்டாயா.

அழகிய ஊற்றே
என்னோடு
பேச மாட்டாயா.

August 1, 2014

நினைவுகள்

நீண்ட பயணங்களைவிட
நீளமானதாய்
இருக்கிறது
உன் நினைவுகள்.

பயணம்
என்றேனும்  முடியும்.

நினைவுகள்
எப்போதும் தொடரும்.

ஜீவமலர்

பாதமலர் நோக
நீ
நடந்து வருகையில்

நான் வாடி
நிற்கிறேன்

என்
ஜீவமலர் நோக.

பேசிக் கொண்டுதான்

உன்னோடு
பேசாமல் இருப்பதாய்
நினைக்காதே.

எப்போதும்
பேசிக் கொண்டுதான்
இருக்கிறேன்

எனக்குள்
இருக்கும்
உன்னோடு.