June 30, 2014

நிலா கவிதை - 5

நீ
நிமிர்ந்து
பார்ப்பதில்லை
என்ற வருத்தத்தில்

மாதம் ஒருமுறைதான்
முகங்காட்டுகிறது
முழுநிலவு.

உறங்காவில்லி

அவன் பெயர்
உறங்காவில்லி.
ஊரறிந்த புள்ளி.

பிறப்பால் மல்லன்.
குணத்தால் நல்லன்.

அவன் மனைவி
பொன்னாச்சி.
அன்று மலர்ந்த மல்லி.

கணவனை தினம்
தொழும் கற்புக்கரசி.
கடவுளை மனம்
தொழும் கடும் தவசி.

இருவரும்
உடலால் ஈரங்கம்.
உயிரால் ஓரங்கம்.
வாழ்ந்தது ஸ்ரீரங்கம்.

உறங்காவில்லி
அவளை மணஞ்செய்ய
பார்க்கவில்லை
கோத்திரம்.
பார்த்தது அவள்
நேத்திரம்.

அந்தப் பெண்ணழகு
கொண்டிருந்தாள்
அப்படியோர்
கண்ணழகு.

முகம் சந்திர அம்சம்.
கண்கள் சூரிய வம்சம்.

மலர்கள் காத்திருக்கும்
அவள் வரும் வழி பார்த்து.
மலைப்பில் வேர்த்திருக்கும்
அவள் கரு விழி பார்த்து.

விண்மீனும்
மண்மானும்
மருண்டோடும்

அவள்
கண் பார்த்து.
வெட்கத்தால்
தலைகுனிந்து
மண் பார்த்து.

எப்போதோ நடந்த கதை
இப்போது ஏன்
சொல்லவேண்டும் இதை.

வினா வரும்.
வியப்பு தரும்.

நான்
உன் கண் பார்க்கையில்
நீ
என் கண் பார்க்கையில்
நான் அதில் தோற்கையில்
கற்பனை எழும்.

நீ பொன்னாச்சியோ?
நான் உறங்காவில்லியோ?

பேசாமல்

பேசாமல்
பேசிக் கொள்கின்றன
நம் கண்கள் - பல
சங்கதி.

பேசாமல்
நாம் பேசிக் கொள்ள
நீ சம்மதி - எனக்கது
நிம்மதி.

நீயம்மா

வேதம் நீயம்மா
நாதம் நீயம்மா

வானம் நீயம்மா
கானம் நீயம்மா

பாடல் நீயம்மா
தேடல் நீயம்மா

மலரும் நீயம்மா
மணமும் நீயம்மா

மாலை நீயம்மா
மலர்சோலை நீயம்மா

ராகம் நீயம்மா
மேகம் நீயம்மா

தென்றல் நீயம்மா
தேனும் நீயம்மா

கடலும் நீயம்மா
அலையும் நீயம்மா

காற்றும் நீயம்மா
கனவும் நீயம்மா

வாசம் நீயம்மா
சுவாசம் நீயம்மா

இரவும் நீயம்மா
விடிவும் நீயம்மா

நேற்றும் நீயம்மா
நாளை நீயம்மா

இதயம் நீயம்மா
உதயம் நீயம்மா

நிலவும் நீயம்மா
நினைவும் நீயம்மா

வாழ்வும் நீயம்மா
வளமும் நீயம்மா

உறவும் நீயம்மா
உயிரும் நீயம்மா

நெஞ்சம் நீயம்மா
தஞ்சம் நீயம்மா

கோயில் நீயம்மா
தெய்வம் நீயம்மா

காதல் நீயம்மா
கவிதை நீயம்மா

ஜீவன் நீயம்மா - அதில்
வாழ்வேன் நானம்மா.

நினைவுச்சின்னம்

தாஜ்மகால் காதலின்
நினைவுச் சின்னமாம்.

காதல் தெரியாதவர்கள்
பேதை போல் பேசுகிறார்கள்.

நினைவுச்சின்னம் என்பது
காலம் விட்டு
கண்ணை விட்டு
மறைந்தவைகளுக்கு
எழுப்பப்படுவது.

என் தாஜ்மகாலே

நீ நினைவுச்சின்னம்
அல்ல
நான் நேசிக்கும் அன்னம்.


June 29, 2014

கடல்நீர்

உன்
தாமரைப் பாதங்களை
நனைக்கவில்லை என்று
கண்ணீர் சிந்துகின்றன
கடல்கள்.

கண்ணீர் கலந்து
கண்ணீர் கலந்து
கடல்நீரெல்லாம்
உப்பானது.

இயற்கையிலேயே
கடல்நீரென்பது
உப்பானது  - என்பது
தப்பானது.

June 28, 2014

காரணம்

வானில் நீலமில்லை
வாழ்வும் நீளவில்லை

காற்றில் ஈரமில்லை
கருமேகம் தூறவில்லை

வானவில்லில் வண்ணமில்லை
வானில் வர எண்ணமில்லை

கடலில் அலையில்லை
கரையோரம் அவையில்லை

நிலவில் பிறையில்லை
நிலத்தில் தரையில்லை

காலம் ஓடவில்லை
கானம் பாடவில்லை 

நிமிடங்கள் நகரவில்லை
வருடங்கள் வளரவில்லை

இமைகள் அசையவில்லை
இயங்க இசையவில்லை

இதயம் இயங்கவில்லை
இறக்க தயங்கவில்லை

இரவில் இரவில்லை
பகலில் பகலில்லை

இயற்கை இதமாயில்லை
எதுவும் இயல்பாயில்லை

உடம்பில் உயிரில்லை
உயிரில் உயிரில்லை

இதற்கெல்லாம்
காரணம்

என்னருகில்
என்னுயிரே
நீ இல்லை.

June 24, 2014

ஒரு வார்த்தை

திருவே

ஒரு வார்த்தைதான்
பேசிக் கொண்டோம்
உன்னோடு நானும்
என்னோடு நீயும்.

அதிலேயே
நூறாயிரம் வார்த்தைகள்
பேசி
ஓராயிரம் ஆண்டுகள்
வாழ்ந்ததாய்
அடைகிறது நிறைவை
என் உயிர்ப் பறவை.

மெல்ல ஒரு அம்பெடுத்து

அர்ஜூன வில்லிலிருந்து
அதிர்வோடு புறப்பட்ட
அம்பென
தாக்குகிறது

முகம் உயர்த்தி
முடி விலக்கி
விழி நகர்த்தி
இமை தளர்த்தி
பாவை நீ
பார்க்கும்
பார்வை.

அம்புப் படுக்கையில்
வீழாது
அன்புப் படுக்கையில்
வீழ்கிறேன் நான்
பீஷ்மனென.

நீ
சிலைபோல் நிற்பதா
சிகண்டியென.

June 21, 2014

தியானம்

தினம் செய்யும்
தியானத்தில்
தொலையாத நான்

மனம் கொய்யும்
உன்
மோனப்பார்வையில்
தொலைந்து போகிறேன்.

தேகத்தில் வாழும் எனக்கு
தேகம் தாண்டிய
அனுபவம் தருகிறது

திருப்பாவை உந்தன்
ஒரு பார்வை.

அடம்

அதிகமாய்
இடம் கொடுத்துவிட்டேன்
என் கண்களுக்கு.

அதனால்தான்
அவை அடிக்கடி
அடம் பிடிக்கின்றன

மீண்டும் மீண்டும்
உன்னை
காண வேண்டும்
என்று.

கவிதை நீ

என் கவிதைகள்
உன் கண்ணில்
படுகிறதோ
இல்லையோ

என் கண்ணில்
எப்போதும்
படுகிற கவிதை
நீ

June 19, 2014

வலி

உன் வருகைக்காக
காத்திருந்து

நகம் கடிக்கும்
நேரத்தில்
யுகம் கடக்கும்
வலி காண்கிறேன்.

நீயோ.......

பூ வைக்கும் பூவே
புன்னகைக்கும் தீவே

நடமாடும் நந்தவனமே
நான் பாடும் கீர்த்தனமே

வாசமுள்ள பூங்காற்றே
வசப்படுத்தும் தேனூற்றே

கார்கால பூ வசந்தமே
கண்டிராத தேவ சொந்தமே

அன்னம் வியக்கும் அன்னமே
பொன்னும் வியக்கும் சொர்ணமே

செந்தாழம்பு திருமேனியே உன்
செவ்விதழ் தேடி வரும் தேனீயே

கண்ணை விட்டு
விலகிடாத ஓவியமே

நெஞ்சம் விட்டு
நீங்கிடாத காவியமே

நீயோ
மண்ணை விட்டு
பூமி வந்த தாமரை

நானோ
யாருமற்று தள்ளி
நிற்கும் தேய்பிறை

நீயோ
வானம் விட்டு
வையம் வந்த தேவதை

நானோ
பாலைதன்னில் சிந்திச்
செல்லும் வான்மழை

கலகம்

நண்பர்கள்
கவிதை கேட்டு
கலகம் செய்தார்கள்.

உன்
பெயர் சொன்னேன்.

கவிதை பிறந்தது
கலகம் மறைந்தது.

June 12, 2014

கவிதையும் காதலும்

தேவன் தந்த
தேவதையே!

விளையாட்டாய்த்தான்
ஆரம்பித்தேன்
உன்னை நினைத்து
கவிதை எழுத.

நாளாக
நாளாக
கவிதை பிறந்தது.

நானே அறியாமல்
காதல் பிறந்தது.

விளையாட்டு வினையானது
வினையானது சுகமானது.

நீயென்னை
கண்ட நாள் முதலாய்
நிழல்கூட
என்னோடு வருவதில்லை.
நிலவுகூட
கண்ணுக்குத் தெரிவதில்லை.

இதயம் இடம் மாறிவிட்டது
இலை போல் தரை மோதிவிட்டது.

என்ன சொல்லி
நானெழுத.
எப்படி உன்
மனமறிய.

கவிதையை சொல்லி விட்டேன்
காதலை சொல்லாமல் விட்டேன்.

இப்போதைக்கு
என்னோடு
இருப்பதெல்லாம்

சொல்ல முடிந்த கவிதையும்
சொல்ல முடியாத காதலும்.

June 10, 2014

சொர்க்கமே

ஊருக்குள் வசிக்கின்ற
புயலே

தேருக்குள் வருகின்ற
தென்றலே

சொல்லுக்குள் அடங்காத
சொர்க்கமே

விதவிதமாய்
வர்ணித்தாலும்
இன்னும் எவ்வளவோ
மிச்சமிருக்கிறது.
உன்னிடத்தில் அழகு
உச்சமிருக்கிறது.

பள்ளிகொண்ட பெருமாளாய்
படுத்திருந்த என் நெஞ்சம்
துள்ளிக்கொண்டு தைதை ஆடுகிறது.
துளித்துளியாய் கவிதை பாடுகிறது.

விடுமுறை

நீ
எப்போதெல்லாம்
விடுமுறை எடுக்கிறாயோ

அப்போதெல்லாம்
விடுமுறை எடுத்துக் கொள்கிறது
என் வாழ்க்கை.

இதயத்தாமரை

எத்தனையோ
மலர்களைச் சூடுகிறாயே...

எப்போது
சூடுவாய்
என் இதயத்தாமரையை.

சூடி என் உயிருக்கு
சுடர் கொடு
சுடர்க் கொடியே.

June 8, 2014

வானவில்

ஓரே
வண்ணம் கொண்ட
வானவில்
என்றுதான் தோன்றுகிறது

உன்
மருதாணி அணிந்த
மலர்க்கரம்
பார்க்கும்போது.