அவன் பெயர்
உறங்காவில்லி.
ஊரறிந்த புள்ளி.
பிறப்பால் மல்லன்.
குணத்தால் நல்லன்.
அவன் மனைவி
பொன்னாச்சி.
அன்று மலர்ந்த மல்லி.
கணவனை தினம்
தொழும் கற்புக்கரசி.
கடவுளை மனம்
தொழும் கடும் தவசி.
இருவரும்
உடலால் ஈரங்கம்.
உயிரால் ஓரங்கம்.
வாழ்ந்தது ஸ்ரீரங்கம்.
உறங்காவில்லி
அவளை மணஞ்செய்ய
பார்க்கவில்லை
கோத்திரம்.
பார்த்தது அவள்
நேத்திரம்.
அந்தப் பெண்ணழகு
கொண்டிருந்தாள்
அப்படியோர்
கண்ணழகு.
முகம் சந்திர அம்சம்.
கண்கள் சூரிய வம்சம்.
மலர்கள் காத்திருக்கும்
அவள் வரும் வழி பார்த்து.
மலைப்பில் வேர்த்திருக்கும்
அவள் கரு விழி பார்த்து.
விண்மீனும்
மண்மானும்
மருண்டோடும்
அவள்
கண் பார்த்து.
வெட்கத்தால்
தலைகுனிந்து
மண் பார்த்து.
எப்போதோ நடந்த கதை
இப்போது ஏன்
சொல்லவேண்டும் இதை.
வினா வரும்.
வியப்பு தரும்.
நான்
உன் கண் பார்க்கையில்
நீ
என் கண் பார்க்கையில்
நான் அதில் தோற்கையில்
கற்பனை எழும்.
நீ பொன்னாச்சியோ?
நான் உறங்காவில்லியோ?