September 30, 2014

எக்காலம்

உன்னோடு பேசாமலிருக்கலாம்
ஒருமுறைக்கு மேல்
உன் விழி பாராமலிருக்கலாம்

ஆனாலும்
நெஞ்சமெல்லாம்
நீதான்
நீதான்
நீதான்

மேல்மனத்தில் இருக்கும்
ஆயிரம் சஞ்சலங்கள்.
ஆழ்மனத்தில் அசையாமல்
உன் நினைவே
உன் உருவே
என் திருவே!

கண்ணருகில் நீயிருக்க
கவலையின்றி நானிருக்க

கண்ணாக நீயிருக்கும் - கனவு
நனவாவதுவும் எக்காலம்?
 

September 29, 2014

இதய தினம்

செப்டம்பர் 29
உலக இதய தினம்.

அனுதினம் எனக்கு
உன் இதயம்தான்
உலகம்.

இதய தினத்திலாவது
இதயம் நீ திறப்பாயா?

இருண்ட என் கீழ்வானில்
உதயம் நீ பிறப்பாயா?

எதையும் கேட்காத
இதயம்
இதயம் கேட்கிறது.

இதையும் கேட்காதா - உன்
இதயம்?
 

September 28, 2014

நதி

நிலத்தை
நிராகரித்துவிட்டு
நதி
நடக்க முடியாது.

உன்
நினைவை
நிராகரித்துவிட்டு - என்
விதி
கடக்க முடியாது.
 

தனிமைத்தவம்

எத்தனை நாள்தான்
இயற்றுவது
தனிமைத்தவம்?

உன்
வடிவில்
வரம்
வராதா.

வசந்தமாய்
வாழ்விற்கு - புது
வண்ணம்
தராதா.

September 25, 2014

மனவாசல்

நகரும் சொர்க்கமே!

உன்
மனவாசல்
வெளியில்
காத்துக் கிடக்கிறேன்.

கூப்பிடும் தூரத்தில்
இருக்கும் என்னை
கூப்பிட மாட்டாயா?
 

September 23, 2014

சுகமான சுமை

மணம் சுமக்கும் காற்று
மலர் சுமப்பதில்லை.

உன்னை
தினம் சுமக்கும்
என் மனமோ

நினைவென்ற
மணத்தையும்

நீயென்ற
மலரையும்
ஒன்றாய்
சுமக்கிறது.

செய்யும் தவம்

எல்லோருக்கும்
வரம் ஒன்றுதான்.

ஆனால்
தவம் வெவ்வேறு.

யாரோ செய்யும்
தவம் நான்.

நான்
யாசிக்கும்
வரம் நீ.
 

ஸ்பரிசம்

விடுமுறை தினங்களில்
நம்
விழிகளின் ஸ்பரிசம்
விட்டுப் போகிறது.

விடை அறியா
என் மனம்
பட்டுப் போகிறது.
 

September 20, 2014

உன் முகவரி

எங்கு வசிக்கிறாய் என
எவரோ கேட்க
ஏதோ ஓரு இடத்தை
சொல்கிறாயே

என் இதயத்தில்
வசிப்பதை
மறந்துவிட்டாயா?
 

September 19, 2014

பொய்யென்று

உன்
சிரித்த முகம்
பார்த்தவர்கள்
சிறிதும் யோசிக்காமல்
சொல்லிவிடுவார்கள்

சொர்க்கம்
பொய்யென்று.

September 15, 2014

கவிப்பெண்

கவிதை போன்ற
பெண்ணை பார்த்தால்
கவிதை வராமல்
வேறென்ன வருமாம்?

இதை பற்றி
கதை பேசும்
ஊருக்கு

என்
கவிதை என்றுமே
புரியாது.

நீ
கவிதை என்பதும்
புரியாது.
 

September 13, 2014

திரைப்பாடல் 3 - உசுர ஒத்த உசுர

My Own lyrics for the song OSAKA SETHA OSAKA from VANAKKAM CHENNAI movie.....

தேடி பாத்தேனே
தேசம் எல்லாமே
தேவத போனத பாக்கவில்ல.

தேதி போனாலும்
சேதி வரவில்ல
தேயாத என் நெஞ்சம் பூக்கவில்ல.

எனக்கே என்ன புரியாம
கவித பாடி தொலச்சேனே.
பாஸா ஃபெயிலா தெரியாம
லூஸா மாறி சிரிச்சேனே.

உசுர ஒத்த உசுர
உருவி மாலையா
ஆக்கித்தான் போட்டுகிட்டா.

உசுர ஒத்த உசுர
அருவி நீராட்டம்
தரையெல்லாம் வழியவிட்டா.

Stanza 1:
ஏன்டி பொறந்த
பேசா மடந்த
கண்ணால பாத்தேயென்
நெஞ்ச தொறந்த.

ஆச பெருசு
ஆயுள் சிறுசு
ஆனாலும் கேக்காதே
ஆடும் மனசு.

நீ எதுக்காக வந்த புள்ள..........

நீ எதுக்காக வந்த புள்ள
எதுக்கால வந்த தொல்ல
கணக்காக என்ன ஏன்டி
களவாடுற.

ஒன்ன பாத்து தொலஞ்சேனே.
ஊசக் காத்தா அலஞ்சேனே.
என்ன நானே பிரிஞ்சேனே.
எல்லாம் மாயம் அறிஞ்சேனே.

உசுர ஒத்த உசுர
உருவி மாலையா
ஆக்கித்தான் போட்டுகிட்டா.

உசுர ஒத்த உசுர
அருவி நீராட்டம்
தரையெல்லாம் வழியவிட்டா.

September 12, 2014

நெஞ்சுக்குள்ளே

நெஞ்சுக்குள் நீயும் வந்து
பஞ்சுக்குள் வைத்த தீயாய்
கவிதைகள் பல
தந்து போனாய்.
கனவில் நிதம்
வந்து போனாய்.

எண்ணத்தில் உன்னைக் கண்டேன்
வண்ணத்தில் நிலவைக் கண்டேன்

கன்னி உன்
கண்கள் கண்டால்
கற்பனை ஓடி வரும்.
காதலும் தேடி வரும்.

எனக்குள்ளே நுழைந்துவிட்டாய்.
இதயத்தை இழந்துவிட்டேன்.

என்னை நான் தேடுகின்றேன்
ஏதேதோ பாடுகின்றேன்.
 

போகிற போக்கில்

போகிற போக்கில்
போட்டுவிட்டுப்
போகிற
FACEBOOK LIKE போல்
பார்த்துவிட்டுப் போகிறாய்.

எப்போது SHARE செய்வாய்
உன் உள்ளத்தை
அதில் உள்ளதை?

September 7, 2014

பிழைக்குமா

என்னைப் போலவே
அழுகிறது
வானமும்.

பிழைக்குமா
உயிரும்
பயிரும்?

September 1, 2014

பாமாலை

ஆண்டாள் சூடிய
பூமாலை
ஆண்டவனை போய்
சேர்ந்தது.

அடியேன் பாடிய
பாமாலை
ஆண்டாளை போய்
சேராமல் ஏன்
சோர்ந்தது?

ஆண்டாள் பாடியது
பாசுரம்.

பாமாலை பாடிய
நானோ
காரணம் அறியா
பாமரம்.