July 29, 2014

காதல் எனும் வேதம்

வரலாறு வாய்விட்டுச்
சொல்வது

வேதங்கள் நான்கு
என்று.

நான் மெய்தொட்டுச்
சொல்வது

வேதங்கள் ஐந்து
என்று.

காதல் என்பதும்
வேதம்தானே.

July 25, 2014

முழுநிலா

தரையில் இறங்கிய
இடியென விழுந்து

விழிகளுக்குள்
அமிலம் ஊற்றியது
அந்த
வேதனைச் செய்தி.

சத்தமில்லை.
யுத்தமில்லை.
என் நாளத்தில்
ரத்தமில்லை.

என்ன செய்தி?

முழுநிலா
மூன்று நாட்களுக்கு
தோன்றாதாம்.

திங்கள் வரை
திங்கள் வராதாம்.

மூன்றாம் பிறை
தோன்றும் வரை
சேர்ந்திருக்கும் என் கண்கள்
சோர்ந்திருக்கும்.

July 24, 2014

தாழம்பு

தூரத்தில் இருந்தாலும்
வாசத்தால் இழுக்கும்
தாழம்பு.

தூரத்தில் இருந்தாலும்
நேசத்தால் இழுக்கும்
நீயும் பூ.

பதிகம்

வர
வர

உன்னை நினைப்பதும்
என்னை மறப்பதும்
அதிகமாகிவிட்டது.

உனக்காக எழுதும்
கவிதையெல்லாம்
என் வரையில்
பதிகமாகிவிட்டது.

July 21, 2014

வார விடுமுறை

வார விடுமுறை என்பதே
கோர விடுமுறை
என்றாகிவிட்டது

உனைக்
காண முடியாதென்பதால்.

இதில்
வார விடுமுறையோடு
கூட விடுமுறை விட்டால்
என்ன செய்ய.

சூரிய ஒளியின்றி
சூரியகாந்தி
பூத்திருக்கும்.

நீ வரும்நாளை
எதிர்பார்த்துக்
காத்திருக்கும்.

July 20, 2014

நினைக்க

நடக்க
நடக்க
தூரம் குறையும்.

உன்னை
நினைக்க
நினைக்க
காதல் நிறையும்.

நினைவலை

உன் நினைவலைகளில்
நீந்தும் போதெல்லாம்
நான்
இல்லாமல்
இருக்கிறேன்.

இருந்தும்
இல்லை என்று
இருக்கிறேன்.

பாரசீக ரோஜா

பர்தா போட்டு வரும்
பாரசீக ரோஜாவே

பகலில் - நீ போகாதே
வெளியில்.

வெள்ளை நிலா
வந்துவிட்டது என்று
சூரியன் மறைந்துவிடும்.

சூரியனும் இல்லாமல்
சந்திரனும் இல்லாமல்
போனால்
தினம் சுற்றும் பூமிக்கு
தலை சுற்றும்.

கன்னிகை

காந்தத்தை விழியில் கொண்ட
கன்னிகையே

மீன் மிதக்கும்
உன் கண்ணால்
நான் மிதக்கிறேன்.

மீன் வாழ நீர் போதும்
நான் வாழ நீ போதும்.

பொறாமை

எவர் மீதும் எனக்கு
பொறாமையில்லை.

முதன்முறையாய்
உன் செல்போன் மீது
பொறாமை கொள்கிறேன்.

எந்நேரமும் உன்
கையில் இருக்கிறது.

காதோடு பேசுகிறது.
கன்னத்தோடு உரசுகிறது.

உன் தேன் தடவிய
இதழோடு
இழைகிறது.

உச்சமாய் - அமிர்தம் போன்ற
உன் திருவாய்
எச்சில் அதன்மேல்
படுகிறது.

செல்போன் செய்தது புண்ணியம்.
நானோ புண்ணியமற்ற பூஜ்யம்.

July 19, 2014

அதிசயம்

என்ன அதிசயமோ
எனக்குத் தெரியவில்லை.

நீ
எந்த ஆடை
அணிந்தாலும்
அந்த ஆடை
அழகாகிவிடுகிறது.

July 18, 2014

தேவதைக்காக ஓரு பிரார்த்தனை


தலையை குனிந்து வரும்
தாமரை
வாடலாமா.

ஆனந்தம் தரும்
ஸ்ரீ ராகம்
சோக கீதம்
பாடலாமா.

தேவமகள் இன்று
தேய்பிறையாய்
ஆகலாமா.

நலிவுற்றதால் முகம்
பொலிவற்று
போகலாமா.

மேகம் நோயுற்றதால்
தேகம் என்ற நீரூற்று
காயலாமா.

பகலில் வரும்
பெளர்ணமி நிலா
தேயலாமா.

இதையெல்லாம்
கண்டு என்மனம்
நோகலாமா.

இதயம் சிந்துகிறது
செந்நீர்.
இமையில் வழிகிறது
வெந்நீர்.

கருணையே வடிவான
திருவே!

நான் காதலிக்கும்
குருவே!

எந்தை வருக
எனதாருயிர் வருக

விசிறி கொண்ட
கையாலே
விசிறுங்கள்.

வினையாலே வந்த
வினையெல்லாம்
விரட்டுங்கள்.

மங்கையவள் நோய்தீர
மயிலிறகால் வருடுங்கள்.

தாய் போன்ற பெண்மையின்
நோய் தீர்த்து அருளுங்கள்.

நோய் நோய் படட்டும்.
உங்கள் ஆசியெனும்
தீ அதை சுடட்டும்.

பணிகிறேன் நான்
உங்கள் பாதம்.
அதுதானே என்றும்
எந்தன் வேதம்.

பாவை ஆகட்டும்
பழையபடி.
படர்ந்து பூக்கட்டும்
பருவக்கொடி.

July 17, 2014

வெளிச்சப் பாதை

என் ஆகாயத்தில் வந்த
வெண்ணிலவே

வாசம் சிந்தும்
பெண்ணிலவே

நீ காட்டும்
வெளிச்சப் பாதையில் தான்
எந்தன் வாழ்வு
நகர்கிறது.

மரங்கள்

மரங்களை வெட்டுவது
பாவம்

என்றிருந்த எனக்கு
நேற்று வந்தது
மரங்களின் மீது
கோவம்.

இப்படியா உன்னை
மறைத்துக் கொண்டு
வளர்ந்து நிற்கும்?

கோடாலி
எங்கே விற்கும்?

July 16, 2014

நிமிடங்கள்

நின்று போன லிப்டுக்குள்
உன்னோடு

நின்று பறந்த வேளையில்

நின்று போயின - என்
நிமிடங்கள்.

July 13, 2014

இதயக் கணவாய்

இதுநாள் வரைக்கும்
கனவாய் இருந்தவள்
எப்படியோ
என் இதயக்
கணவாய் வழியே
புகுந்துவிட்டாய்.

புன்னகை செய்து
முற்றுகை செய்தாய்.

இனி
என் மனதேசம்
உன் மொழி பேசும்.

என்ன வேலை

உன்னைத்தான்
படைத்து முடித்துவிட்டானே
இனி பிரம்மனுக்கு
என்ன வேலை.

பிரம்மா - நீ இரு
சும்மா.

வானவில்

உன்னை
வரைந்து முடித்துவிட்டு
பிரம்மன்
மிச்சமிருந்த வண்ணத்தை
கீழே சிந்தினான்.

அதுவே
வானவில் ஆனது.

தாரகை

பேசுகின்ற ஓவியமே - நான்
பாடுகின்ற காவியமே

திருமகள் என்று - பொன்
தூரிகை கொண்டு
தாரகை உன்னைத்
தீட்டினானோ.

அற்புதம் நீ என்று
அமிர்தம் தான் கொண்டு
உனக்கு உயிர்
ஊட்டினானோ.

நினைவுகள்

நீ இல்லாமல் கூட
வாழ்ந்திடுவேன்
தன்னால்.

உன் நினைவுகள்
இல்லாமல்
வாழவே முடியாதடி
என்னால்.

July 12, 2014

மனமில்லை

இருந்தவரைக்கும்
எடுத்துக் கொடுத்துவிட்டேன்
உன்னிடம்
என் மனதை.

இனி
கொடுப்பதற்கு
மனமில்லை.

உனக்கேன்
உன் மனதை
கொடுப்பதற்கு
மனமில்லை.

கதவைத் திற

ஊருக்குள் வசிக்கின்ற
உன்னதமே

உயிர்த் தீவுக்குள் வசிக்கின்ற
சுடரே

உன் இதயக்
கதவைத் திற.

என் காதல்
காற்று வரட்டும்.

புனிதம்

கங்கையில் குளித்தாய்
நீ புனிதம் அடைந்தாய்.

யமுனையில் குளித்தாய்
நீ புனிதம் அடைந்தாய்.

காவிரியில் குளித்தாய்
நீ புனிதம் அடைந்தாய்.

கடலில் குளித்தாய்
கடல் புனிதம் அடைந்தது.

கணைவிழி

அழகைவிட அழகான
அழகே...

ஒரு நொடியில்
ஓராயிரம் கவி
சொல்கிறது
உன்
கணைவிழி.

பார்வையால்
தீண்டிவிட்டுப் போகிறாய்.

பரவசம்
தூண்டிவிட்டுப் போகிறாய்.

பார்வை

எத்தனை ஜென்மம்
எடுத்து வந்தேனோ

எத்தனை யுகம்
காத்து நின்றேனோ

நீ என்னை நோக்க.

நான் உள்ளே பூக்க.

July 10, 2014

காகிதம்

நீ
கை துடைத்து
கசக்கி எறிந்த
காகிதம் கூட

எனக்கு
கவிதையாகிறது.

அடைமழை

அடித்துப் பெய்கிறது
அடைமழை.

அலுவலகம் விட்டு
அன்பே - நீ எனக்கு
முன்பே நகர்கிறாய்
வீடு நோக்கி.

இருவரும் நனைகிறோம்

நீ தண்ணீரிலும்
நான் கண்ணீரிலும்.

வெறுப்பு

இருட்டில்
தலைகுனிந்து
தரை பார்த்து
எதிர்வந்த
என்னை தவிர்த்து
நீ போனாய்.

நான் தவித்துப்
போனேன்.

உலகின்
ஒட்டுமொத்த
வெறுப்பு
வெருட்டென்று
இருட்டின் மீது
வந்தது எனக்கு.

July 9, 2014

நான் வரைந்த ஓவியம்

உன்னை கண்ட
பின்புதான்
என்னை கண்டு
கொண்டேன்.

என்னை கண்ட
பின்புதான்
காதல் கண்டு
கொண்டேன்.

ஏன் ராணி என்னை நீ
ஏங்கச் செய்கிறாய்.

கண்ணீரை கண்ணிலே
தேங்கச் செய்கிறாய்.

நான் வரைந்த ஓவியம்
காணவில்லை உன் திருமுகம்.

ஓவியத்தில் உயிருமில்லையே
ஓவியனில் உணர்வுமில்லையே.


July 8, 2014

காத்திருக்கும் கவிதை

எப்போது
நீ படிப்பாயோ
என்று

இதயம் படபடக்க
இமைகள் சடசடக்க
எதிர்ப்பார்ப்போடு
காத்திருக்கிறது

உன் பிறந்தநாளுக்காக
நான் எழுதிய
கவிதை.

என் உயிரிலிருந்து
வளர்ந்து நிற்கும்
பூவிதை.

July 7, 2014

வாராயோ

வாராயோ பூங்கிளி
கூறாயோ தேன் மொழி

நீ இல்லாமல் நானுமே
நீலமில்லா வானமே

நான்
காண்பதெல்லாம் மாயமே
காலமெல்லாம் சாயுமே

காற்று கூட தேயுமே
உயிர்
கூடு விட்டு பாயுமே

நான் தினம் வாடினேன்
உன் முகம் தேடினேன்.

பிரசவ வலி

முல்லை பூவின்
மகளே

உன்
இரு இதழ்களுக்கிடையே
புன்னகை பிறக்காதா

என்று
பரிதவிக்கிறேன்
பிரசவ வலியோடு.

July 6, 2014

மடிக்கணிணி

என்ன தவம்
செய்ததோ
அந்த மடிக்கணிணி.

எப்போதும் உன்
கையோடு
கண்ணோடு

முப்போதும்
உன்னோடு
வசிக்கிறது.

தவமே செய்யாமல்
மோட்சம் ருசிக்கிறது

உன்
விழி பட்டு
விரல் தொட்டு.

மலர்க் கண்காட்சி

மலர்க் கண்காட்சிக்கு
போயிருந்தேன்.

எல்லாப் பூக்களும்
இருந்தன.

நீ மட்டும்தான்
இல்லை.

என் பேனா

உன்னை நினைத்து
கவிதை எழுதத்
தொடங்கும் முன்பே

எழுதி முடித்துவிடுகிறது
என் பேனா.

இதை
என் திறமை என்பேனா?
உன் மகிமை என்பேனா?

படைப்பு

ஆகாயம்
காற்று
கடல்
பூக்கள்
நதி
தீ

எல்லாம் படைத்தும்
பூரணமாகவில்லை
பூமி.

உன்னைப் படைத்தான்.

பூமி பூரணமாயிற்று.
அதன் குறை
ஜீரணமாயிற்று.

காதல் தீவினிலே

என்
காதல் தீவினிலே
பெண்ணே
உன் ஊர்வலம்.

எனை ஏற்றி
ஊர் செல்ல
கண்ணே
உன் தேர் வரும்.

அந்த நாள் வரும்.

ஞாபகச்சிமிழ்

உன்னைப் பற்றிய
ஞாபகங்களால்
மூட முடியாமல்
நிரம்பி
நிரம்பி

நிறைந்து வழிகிறது
என் ஞாபகச்சிமிழ்.

கண்பட்டதனால்

என்முன்
நீ தென்பட்டதனால்

என்மேல் உன்
கண்பட்டதனால்

மண் விட்டதை
விண் தொட்டது
நான்.

பண் கொட்டுது
காண்.

July 4, 2014

மெளனமே காதலாக

நீயும் சொல்லாமல்
நானும் சொல்லாமல்
மெளனமாய் நிற்பதால்

இருவருக்கும் நடுவே
மெளனமாய் நிற்கிறது

மெளனமே காதலாக.

உன் நினைவு

நிமிடங்கள் கரைந்தாலும்
வருடங்கள் விரைந்தாலும்

வானம் சென்றாலும்
காற்று நின்றாலும்

பூமி புதைந்தாலும்
பூக்களெல்லாம் எரிந்தாலும்

பிறை நிலா உடைந்தாலும்
பிரபஞ்சம் கிழிந்தாலும்

மழைத்துளி மறைந்தாலும்
உயிர்த்துளி உலர்ந்தாலும்

உன்
நினைவு
நீங்காதடி.

தாமரை


கண்மூடி
கடலில் பூத்த

 
வெண்தாமரை - இந்த
பெண்தாமரை.

பூ

மடியில் இருக்கும்
பூவைப் பார்க்கிறது

 
படியில் இருக்கும்
பூ.

July 3, 2014

தென்றல்

உன்னை
வருடும்
தருணம்

தென்றல்
திண்டாடிப் போகிறது.

தாரகை உன்னைத்
தீண்டியதை

திருவிழாவாய்
கொண்டாடிப் போகிறது.

மொழி

இன்றுவரை
புரியவில்லை எனக்கு

உன்
விழி பேசும்
மொழி.

விழியால் பேசாமல்
மொழியால் பேசு
கனிமொழியே.

July 2, 2014

பிறந்த நாள் கவிதை

ஆனந்தமே
பரமானந்தமே
என்று

ஆனந்தக் கூத்தாடுகிறது
என் உள்ளம்.

புதிதாய் ஓரு
கவிதை
வந்ததால்
உள்ளமெல்லாம்
மகிழ்ச்சி வெள்ளம்.

காரணமின்றியா
கவிதை பிறந்தது?

கவிதை பிறந்ததால்
கவிதை பிறந்தது.

கண்டுகொண்டேன்

கைவீசும் காற்றே

உந்தன்
கண் கண்டதால்
கண்டறியாதன
கண்டேன்.

உன்னை
தேடிக் கண்டுகொண்டேன்.
எனக்குள்
தேடாமல் கண்டுகொண்டேன்.

மந்திரப்பாவை

சுந்தரப்பாவையே
நீ என்ன
மந்திரப்பாவையா.

வண்டு விழியால்
வசியம் செய்கிறாய்.
வலியே இல்லாமல்
இதயம் கொய்கிறாய்.

ஆச்சரியம்

இரும்புக் கோட்டையாய்
இருந்த என்
இதயத்தில்
எப்படித்தான் நீ
நுழைந்தாயோ.

நினைக்க நினைக்க

ஆச்சரியம் - என்மீது
பூச்சொரியும்.

மூச்சுக்காற்று

உன்
மூச்சுக் காற்றை
சுவாசித்துதான்
காலந்தள்ளுகிறது
காற்று.

தட்டி எழுப்பியவள்

ஏனோதானோ என்று
நான்
எழுதிக் கொண்டிருக்க

எனக்குள்
உறங்கிக் கிடந்த
கவிதையை தட்டி எழுப்பியவள்
நீதானடி.

July 1, 2014

திருமுகம்

திருமுகம் காணாமல்
இரு தினம் போனது.

முன் தினம் கண்டதால்
மூச்சு பிழைத்தது.

பெண் தினம் காணாது
கண் தினம் தேடுது.

கண் தினம் காணாது
என்னுயிர் வாடுது.