December 22, 2014

எனக்காக... எனக்காக.. எனக்காக

எனக்காக எழுந்து கொண்டு
எனக்காக நடந்து வந்து

என் எதிரே மலர்ந்து நின்று
என் கரம் பற்றிக் கொண்டு

எனக்காக இதழ் விரித்து
என் விழி பார்த்து சிரித்து

என் வாழ்வை வாழ்த்திவிட்டு
என்னிலிருந்து என்னை எடுத்துக் கொண்டு

நகர்ந்து போயிற்று
நிலவு.

என்னுள்
ஏதோ ஆயிற்று
என்பதாய்
நினைவு.

வாழ்த்துக்களுக்கு நன்றி
சொல்ல
வார்த்தைகளுக்கு எங்கு
செல்ல.

December 21, 2014

வாழ்த்து

தேவதையின் வாழ்த்தினிலே
தேங்கிக் கிடக்கிறது
தேகத்துள் மனது.

December 17, 2014

உனை பிரிந்தால்

இமை மேலே சுமை போலே
உன் நினைவு நடக்கிறதே.

நமை காணும் மழை மேகம்
நனைக்காமல் நகர்கிறதே.

உயிரினிலே ஒரு பாதி
உனைத் தேடி அலைகிறதே.

மறுபாதி உயிர்கூட
மறந்தென்னை பிரிகிறதே.

உயிர் பிரிந்த உடலினிலே
உயிர் வாழும் ஒரு நிமிடம்.

உனை பிரிந்தால் எனதுயிரும்
உடனடியாய் விலகிவிடும்.

December 12, 2014

மெளனம்

வெளிவராத உன்
வார்த்தை - காயம்
செய்கிறது.

நான்
விரும்பாத உன்
மெளனம்  - என்னை
கொல்கிறது.

மெளனம் கலைத்து
காயம் அகற்று.

December 8, 2014

சாட்சி

வானத்து
தேவதைகள்
பூமிதனில்
வாழ்கிறார்கள்
வலம்
வருகிறார்கள்
என்பதற்கு
நீயே சாட்சி.
 

December 6, 2014

யார் சொல்வதோ

நான் வந்து
பேசினால்
தவறாய் நீ
நினைப்பாயோ
என
நான் நினைக்கிறேனோ?

நீ வந்து
பேசினால்தான்
நான் பேசுவேன்
என
நீ நினைக்கிறாயோ?

கலங்கி கலங்கி
மனம் நினைக்கிறது.
கண்ணீர் எனை
தினம் நனைக்கிறது.

அலங்காரம்

பூக்களால் ஆன
உன்னை - தமிழ்
பாக்களால் ஆன
மட்டும் நான்
அலங்கரிக்கிறேன்.
 

ரோஜா

எங்கோ மலர்ந்த
ரோஜா
என்னெதிரே
பூத்திருக்கிறது.

பாக்கியம்

உன்
இந்திர அழகை
சுந்தரத் தமிழால்
பாடுவது என்
பாக்கியம்.

பாடுவதால்
வாழ்கிறேன் - என்
பாவங்களைப்
போக்கியும்.
 

December 4, 2014

பெண்மயில்

தோகை இல்லாத
பெண்மயில்
உலகினில்
உண்டா?

உண்டே - அதான்
நீயிருக்கிறாயே.
 

November 26, 2014

முக்தி

பொன்மேகம் போல
மென்தேகம் கொண்டு
பெண்மேகம் நீயும்
நடக்க

வெண்மேகம் கரைந்து
வெகுவேகமாய் இறங்கி

உன்னை நனைத்து
உலகம் சலித்து

அடைகிறது
முக்தி.

November 25, 2014

பூ

கண்களில் தவழும்
புன்னகையாலே
பாட்டெழுதும்
பூ
நீ.

தனியாய் இருக்க

தனிமையைக் கூட
தள்ளிவிட்டு
தனியாய் இருக்க
உன்னால்
பழகிக் கொண்டேன்.

இறுக்கமாய்

உன் மூலமாய்
எனக்கு அறிமுகமான
காதல்
என்னோடு தினம்
பேசிக் கொண்டிருக்கிறது.

நீ மட்டும் ஏனோ
பேச மறுக்கிறாய்.

இன்னமும்
இறுக்கமாய்
இருக்கிறாய்.

November 22, 2014

முகவரி

உண்மையைச் சொல்.

இரக்கமில்லாமல் - என்
இதயத்தின் முகவரியை
காதலுக்கு
காட்டிக் கொடுத்தவள்
நீதானே.
 

November 21, 2014

என்ன கேட்பேன்

எந்த தெய்வமோ
எதிரே தோன்றி
என்ன வரம் வேண்டுமென
என்னைக் கேட்டால்

உன்னை அன்றி
நான் என்ன கேட்பேன்
தேவதையே?

November 18, 2014

நிழல்

உன்னைப்
போலவே
அழகாய்
இருக்கிறது

உன்
நிழலும்.
  

November 12, 2014

திக்குகள்

இடப்பக்கம்
வலப்பக்கம்
மேல்பக்கம்
கீழ்பக்கம்

எல்லா திக்கும்
நீதான்.

எப்போது வருவாய்
என் பக்கம்?

காத்திருக்கும்  இதயம்
காலமெல்லாம் படபடக்கும்.
 

நானே

உன்னால்
நானே எனக்கு
ஆச்சரியமானேன்.

காதல் பள்ளத்தாக்கில்
தடுக்கி விழுந்து
கால் சரியலானேன்.
 

கவிதை நூல்

சொல் கடந்த உன்
செளந்தர்யத்தை
சொற்களுக்குள்
அடக்க முயன்று
தோற்கிறேன்.

முடிந்தவரை
கவிதை நூல்
நூற்கிறேன்.
 

அப்போதெல்லாம்

காதல் தவறு
என்றே
நினைத்திருந்தேன்.

அப்போதெல்லாம்
உன்னைப்
பார்க்கவில்லை.

தோன்றவில்லை

என் முழுமனதை
உன்னிடத்தே
சொல்லுகின்ற
கவிதை - இன்னும்
தோன்றவில்லை என்றே
தோன்றுகிறது.

November 10, 2014

மனக்கதவு

என் மனக்கதவு
திறந்து கிடக்கிறது.

நீ
ஏனோ இன்னும்
ஜன்னலைக் கூட
திறக்கவில்லை.

November 8, 2014

மாயப்புறா

என்
மனம் என்னும்
மாயப்புறா
உன்
வனம் சுற்றியே
பறக்கிறது.

அதற்கு
விழி காட்டு
வழி காட்டு.

கண்வலி

கடவுள் வந்து
சொன்னாலும்
பார்க்க மாட்டேன்
உன்னை
கண்வலியோடு.

என் வலியை
தாங்கிக் கொள்வேன்.
உன் வலியை
தாங்க மாட்டேன்.
 

November 7, 2014

நான் என்பது

பார்வை கொண்ட
ஒவியமே!

நீ பார்க்கும் போது
நான் என்பது ஏது?

நீ விலகும் போது
நான் வாழ்வது ஏது?

எல்லாம் நீ

அங்கும் நீ
இங்கும் நீ
எங்கும் நீ.

நீயாகவும் நீ
நானாகவும் நீ.

எல்லாம் நீ
எல்லாமும் நீ.

எனில்
ஏது இங்கே நான்?

திருஷ்டி

உனக்குத்
தெரியுமோ
தெரியாதோ.

உன் கண்ணே
உன் அழகைப்
பார்த்து
கண் வைக்கிறதாம்.

என் கண்ணே!
கவனமாய் இரு.

கண் திருஷ்டி
பட்டுவிடப்
போகிறது.

November 5, 2014

தொடுவானம்

தொடுந்தூரம்
நீயிருந்தும்
எனக்கு நீ
தொடுவானம்தான்.

November 4, 2014

நீ

நீ
கால் கொண்டு
நடந்து வரும்
பூச்செண்டு.

கைகோர்த்து
கடந்து போகும்
பூங்கொத்து.
 

பயங்கரவாதம்

என்
மன எல்லை தாண்டி
ஆக்கிரமிப்பு
செய்கிறாய்.

காதல்

எல்லை கடந்த
சுகமான
பயங்கரவாதம்
என்பதை

சொல்லாமல்
சொல்கிறாய்.

பூவிழி வாசல்

உன்
பூவிழி வாசலில்
நான்
காத்திருப்பது
கண்டும்
காணாமல் போகிறாய்.

November 3, 2014

கண்ணில் மழைக்காலம்

உன்
வானத்திலிருந்து வந்து

இருதயத்தில்
இறங்கிவிட்டது
இடி.

இரு கண்களில்
பிறந்துவிட்டது
மழை.

காதல் ஒரு
சூறாவளிதான்.

காதலிப்பவருக்கு
தீராவலிதான்.
 

விலகாதே

என்னை விட்டு
விலகி நீ
போகிறாய்.

என்னை விட்டு
விலகி நான்
போகிறேன்.
 

அழகானவள்

பிரபஞ்சம் முழுவதும்
தேடிப்பார்த்துவிட்டேன்.

உன்னை விட
அழகானவள்
நீதான்.
 

October 29, 2014

மெளன மொழி

மெளன மொழி பேசி
என் மனம் ஆள்கிறாய்.

ஆனால்
என் மனம் முழுக்க
உன்னைப் பற்றிய
பேச்சாகத்தான்
இருக்கிறது.

நீ ஆள்வதால்
நான் வாழ்கிறேன்.

பல்லக்கு

உன்
நினைவுப் பல்லக்கை
தூக்கி சுமக்கையில்
கனமே தெரிவதில்லை.

படை

அழகால் கொடி பிடித்து
விழியால் படை எடுத்து
வருகிற மானே!

எதிர்க்கும் எண்ணமில்லை
என்னில் வீரமில்லை - உன்
அடைக்கலம் நானே.

பார்ப்பேன்

பத்து மணிவரை
பணி பார்த்து
வீடு திரும்பும்

பாவை உன்னை
நீ போகும் பாதையில்
பார்ப்பேன்.

பனிமலராய் என்னுள்
பூப்பேன்.
 

October 17, 2014

பாலைநிலம்

வானமெங்கும் நீதானே
வாசமுள்ள பூந்தேனே!

மேகம் உன்னைக் காணாது
வாடுவதும் நான்தானே.

யாரு உண்டு தூது செல்ல
என் மனசின் சேதி சொல்ல

பாலைநிலம் வாடுதம்மா
பாவை உன்னை தேடுதம்மா

உள்ளமும் ரெண்டாச்சு
காரணம் பெண்ணாச்சு.

கண்ணீரும் தீயாச்சு
ஆனந்தம் போயாச்சு.

October 16, 2014

வலி

பூமி தேடி
தாவி வந்த
பொன்னோவியமே!

உனை நாடி
இரண்டடிகள்
முன்னோக்கி வைத்தால்
நான்கடிகள்
பின்னோக்கி செல்கிறேன்.

பெண்ணே!
என்னை
முன்னே இழுப்பதும் நீ
பின்னே தள்ளுவதும் நீ.

ஏதுமுண்டோ
என்னிடம்?

ஆட்டுவிப்பவள் நீயன்றோ.
ஆடும் பொம்மை நானன்றோ.

கேட்கிற இடத்தில்
நானிருக்கிறேன்.

கொடுக்கிற இடத்தில்
நீயில்லை.

விதி வலியது.
வலி கொடியது.

October 15, 2014

காணிக்கை

மகிழம்பூ மலரே!

நீ
வராது வந்த தாரகை.
உலா வரும் தூரிகை.

உன்
பூவசந்த தேகம்
ஆனந்த மேகம்.
பிரம்மன் செய்த
பிரத்யேக யாகம்.
காணக் கண் கோடி
வேண்டுகின்ற தாகம்.

யாரிவள்
இப்பூமகள்
என

தரை வந்த
பிறை
உன்னை

வையம் யாவும்
போற்றும்.

அதில்
கையும் கோர்க்கும்
காற்றும்.

காதல் நேரும் போது
காமம் அங்கு ஏது?

மாணிக்க மீனே!
மாலைத் தேனே!
காணிக்கை நானே
ஏற்பாய் மானே.
 

October 14, 2014

அதிசயம்

உன்னை நினைத்து
என்னென்ன
உளறிக் கொட்டினாலும்
கவிதையாகி விடுகிறது.

இது
விதி செய்யும்
அதிசயம்.
 

October 13, 2014

காய்ந்த பூமி

காய்ந்து கிடக்கும்
பூமியை பார்த்து
அமைதி காக்கும்
வானம் போல

மனம் தேய்ந்து கிடக்கும்
என்னை பார்த்தும்
அமைதியாய் கடக்கிறாய்.

என்றைக்கு
வானம் திறக்குமோ - உன்
வார்த்தை பிறக்குமோ?
 

October 12, 2014

உன் போக்கில்

என் போக்கில்
இருந்த என்னை

உன் போக்கில்
இழுத்துவிட்டாய்.

போகப் போகத்தான்
தெரியும்.

என்
பொழுது விடியுமோ
பொழுது முடியுமோ?
 

நிலாக்கள்

நேற்றுதான் படித்தேன்.

பிரபஞ்ச பால்வெளியில்
இருப்பது மொத்தம்
29 நிலாக்களாம்.

பூமிக்கு ஒரு நிலவாம்
நெப்டியூனுக்கும் ஒன்றாம்
செவ்வாய்க்கு இரண்டாம்
வியாழனுக்கு மூன்றாம்
யுரேனஸூக்கு நான்காம்
சனிக்கு ஒன்பதாம்

எனக்கு
நீ மட்டும்தான்.

October 9, 2014

ஆதாரம்

வெளிப்படுத்த
முடியாத
காதலெல்லாம்
கவிதையாகத்தான்
வெளிப்படுகிறது.

கவிதைக்கு ஆதாரம்
காதல்.

காதலுக்கு ஆதாரம்
நீ.

புத்தகம்

என்
இதயப்
புத்தகத்தின்
எல்லா பக்கங்களிலும்
எழுதப்பட்டிருப்பது

உன் பெயர்தான்.
 

October 8, 2014

திரும்ப திரும்ப

திரும்ப திரும்ப
படித்த புத்தகத்தை
திரும்ப திரும்ப
படிப்பதைப் போல

திகட்ட திகட்ட
நினைத்த உன்னை
திரும்ப திரும்ப
நினைக்கிறேன்.

October 7, 2014

நின்றுவிடும்

எழுதும்
எல்லா கவிதையும்
உனக்காகத்தான்.

வேண்டாம் என்று
நீ சொன்னால்
நின்றுவிடும்...

என் கவிதையும்
என் காற்றும்.

October 6, 2014

சாபம்

விசுவாமித்திர முனிவரோ
வசிஷ்ட மகரிஷியோ
துர்வாச முனியோ

யாரோ சாபமிட
பூமிக்கு வந்து
பிறந்த
தாரகை நீ.
 

September 30, 2014

எக்காலம்

உன்னோடு பேசாமலிருக்கலாம்
ஒருமுறைக்கு மேல்
உன் விழி பாராமலிருக்கலாம்

ஆனாலும்
நெஞ்சமெல்லாம்
நீதான்
நீதான்
நீதான்

மேல்மனத்தில் இருக்கும்
ஆயிரம் சஞ்சலங்கள்.
ஆழ்மனத்தில் அசையாமல்
உன் நினைவே
உன் உருவே
என் திருவே!

கண்ணருகில் நீயிருக்க
கவலையின்றி நானிருக்க

கண்ணாக நீயிருக்கும் - கனவு
நனவாவதுவும் எக்காலம்?
 

September 29, 2014

இதய தினம்

செப்டம்பர் 29
உலக இதய தினம்.

அனுதினம் எனக்கு
உன் இதயம்தான்
உலகம்.

இதய தினத்திலாவது
இதயம் நீ திறப்பாயா?

இருண்ட என் கீழ்வானில்
உதயம் நீ பிறப்பாயா?

எதையும் கேட்காத
இதயம்
இதயம் கேட்கிறது.

இதையும் கேட்காதா - உன்
இதயம்?
 

September 28, 2014

நதி

நிலத்தை
நிராகரித்துவிட்டு
நதி
நடக்க முடியாது.

உன்
நினைவை
நிராகரித்துவிட்டு - என்
விதி
கடக்க முடியாது.
 

தனிமைத்தவம்

எத்தனை நாள்தான்
இயற்றுவது
தனிமைத்தவம்?

உன்
வடிவில்
வரம்
வராதா.

வசந்தமாய்
வாழ்விற்கு - புது
வண்ணம்
தராதா.

September 25, 2014

மனவாசல்

நகரும் சொர்க்கமே!

உன்
மனவாசல்
வெளியில்
காத்துக் கிடக்கிறேன்.

கூப்பிடும் தூரத்தில்
இருக்கும் என்னை
கூப்பிட மாட்டாயா?
 

September 23, 2014

சுகமான சுமை

மணம் சுமக்கும் காற்று
மலர் சுமப்பதில்லை.

உன்னை
தினம் சுமக்கும்
என் மனமோ

நினைவென்ற
மணத்தையும்

நீயென்ற
மலரையும்
ஒன்றாய்
சுமக்கிறது.

செய்யும் தவம்

எல்லோருக்கும்
வரம் ஒன்றுதான்.

ஆனால்
தவம் வெவ்வேறு.

யாரோ செய்யும்
தவம் நான்.

நான்
யாசிக்கும்
வரம் நீ.
 

ஸ்பரிசம்

விடுமுறை தினங்களில்
நம்
விழிகளின் ஸ்பரிசம்
விட்டுப் போகிறது.

விடை அறியா
என் மனம்
பட்டுப் போகிறது.
 

September 20, 2014

உன் முகவரி

எங்கு வசிக்கிறாய் என
எவரோ கேட்க
ஏதோ ஓரு இடத்தை
சொல்கிறாயே

என் இதயத்தில்
வசிப்பதை
மறந்துவிட்டாயா?
 

September 19, 2014

பொய்யென்று

உன்
சிரித்த முகம்
பார்த்தவர்கள்
சிறிதும் யோசிக்காமல்
சொல்லிவிடுவார்கள்

சொர்க்கம்
பொய்யென்று.

September 15, 2014

கவிப்பெண்

கவிதை போன்ற
பெண்ணை பார்த்தால்
கவிதை வராமல்
வேறென்ன வருமாம்?

இதை பற்றி
கதை பேசும்
ஊருக்கு

என்
கவிதை என்றுமே
புரியாது.

நீ
கவிதை என்பதும்
புரியாது.
 

September 13, 2014

திரைப்பாடல் 3 - உசுர ஒத்த உசுர

My Own lyrics for the song OSAKA SETHA OSAKA from VANAKKAM CHENNAI movie.....

தேடி பாத்தேனே
தேசம் எல்லாமே
தேவத போனத பாக்கவில்ல.

தேதி போனாலும்
சேதி வரவில்ல
தேயாத என் நெஞ்சம் பூக்கவில்ல.

எனக்கே என்ன புரியாம
கவித பாடி தொலச்சேனே.
பாஸா ஃபெயிலா தெரியாம
லூஸா மாறி சிரிச்சேனே.

உசுர ஒத்த உசுர
உருவி மாலையா
ஆக்கித்தான் போட்டுகிட்டா.

உசுர ஒத்த உசுர
அருவி நீராட்டம்
தரையெல்லாம் வழியவிட்டா.

Stanza 1:
ஏன்டி பொறந்த
பேசா மடந்த
கண்ணால பாத்தேயென்
நெஞ்ச தொறந்த.

ஆச பெருசு
ஆயுள் சிறுசு
ஆனாலும் கேக்காதே
ஆடும் மனசு.

நீ எதுக்காக வந்த புள்ள..........

நீ எதுக்காக வந்த புள்ள
எதுக்கால வந்த தொல்ல
கணக்காக என்ன ஏன்டி
களவாடுற.

ஒன்ன பாத்து தொலஞ்சேனே.
ஊசக் காத்தா அலஞ்சேனே.
என்ன நானே பிரிஞ்சேனே.
எல்லாம் மாயம் அறிஞ்சேனே.

உசுர ஒத்த உசுர
உருவி மாலையா
ஆக்கித்தான் போட்டுகிட்டா.

உசுர ஒத்த உசுர
அருவி நீராட்டம்
தரையெல்லாம் வழியவிட்டா.

September 12, 2014

நெஞ்சுக்குள்ளே

நெஞ்சுக்குள் நீயும் வந்து
பஞ்சுக்குள் வைத்த தீயாய்
கவிதைகள் பல
தந்து போனாய்.
கனவில் நிதம்
வந்து போனாய்.

எண்ணத்தில் உன்னைக் கண்டேன்
வண்ணத்தில் நிலவைக் கண்டேன்

கன்னி உன்
கண்கள் கண்டால்
கற்பனை ஓடி வரும்.
காதலும் தேடி வரும்.

எனக்குள்ளே நுழைந்துவிட்டாய்.
இதயத்தை இழந்துவிட்டேன்.

என்னை நான் தேடுகின்றேன்
ஏதேதோ பாடுகின்றேன்.
 

போகிற போக்கில்

போகிற போக்கில்
போட்டுவிட்டுப்
போகிற
FACEBOOK LIKE போல்
பார்த்துவிட்டுப் போகிறாய்.

எப்போது SHARE செய்வாய்
உன் உள்ளத்தை
அதில் உள்ளதை?

September 7, 2014

பிழைக்குமா

என்னைப் போலவே
அழுகிறது
வானமும்.

பிழைக்குமா
உயிரும்
பயிரும்?

September 1, 2014

பாமாலை

ஆண்டாள் சூடிய
பூமாலை
ஆண்டவனை போய்
சேர்ந்தது.

அடியேன் பாடிய
பாமாலை
ஆண்டாளை போய்
சேராமல் ஏன்
சோர்ந்தது?

ஆண்டாள் பாடியது
பாசுரம்.

பாமாலை பாடிய
நானோ
காரணம் அறியா
பாமரம்.

August 30, 2014

கவிதை கேட்காதே

அழகிய தமிழ்
மகளே...

கவிதை கேட்காதே
இனிமேல்.

ஆளுயரக் கண்ணாடி முன்
அலங்காரமாய் நின்று
படித்துக் கொள்.

August 29, 2014

நனைந்த பூமி

வானில்
மேகமில்லை
மின்னலில்லை
இடியுமில்லை
மழையில்லை

ஆனாலும்
என் கண்ணீரால்
பூமி
நனைந்து போயிற்று.

August 27, 2014

நீயும் கவிதையும்

நீ
உள்ளே
இருக்கிறாய்.

கவிதைகள்
வெளியே
இருக்கின்றன.

August 22, 2014

பூத்தது பூ

ஆடை மேலாடும்
பூவே!

அல்லி
அந்தி மந்தாரை
ஆவாரம்பூ
ஆம்பல்
சூரியகாந்தி
ரோஜா
ஜாதிமல்லி
மயிற்கொன்றை
பவளமல்லி
பாரிஜாதம்
செங்காந்தள்
செம்பருத்தி
மல்லிகை
முல்லை
தாழம்பூ
மனோரஞ்ஜிதம்
நீலாம்பரி
தாமரை

இதில்
எந்தப் பூ பூத்ததோ
எனக்குள்ளே
தெரியவில்லை.

உன் மேல்
துப்பட்டா
என் மேல்
பட்டபோது.

என்னுயிரை
தொட்டபோது.

August 18, 2014

பொழுதுகள்

உன்னை காணாத
போதெல்லாம்

நாள் கடத்துவது
ஆள் கடத்துவதைவிட
கடினமாயிருக்கிறது.

August 17, 2014

முள்

உன் காலில்
குத்திய முள்
என் நெஞ்சில்
குத்திவிட்டது.

கொடுமைக்கார முள்
என்று ஒரு பக்கம்
கோபம்.

கொடுத்து வைத்த முள்
என்று மறு பக்கம்
தாபம்.

August 16, 2014

சிறு தூறல்

என் மனது
என் வசம் இல்லை.
என்னை வந்து
பார்ப்பதும் இல்லை.

செண்பகமே - உன்
காலடி தேடி வந்து
காத்திருக்கு பாரடி
பெண்ணே.

திருமகள் நீயும்
வரும் நேரம்
நெஞ்சின் ஓரம்
மழைத்துளி கூடி
சிறு தூறல் தினம்
போடும்.

என்னை நீயும்
பாரம்மா.
என்னுள் நாளும்
போரம்மா.

August 15, 2014

விழி பேசும் மொழி

தேவ மாதே

முன் வந்து
முகம் பார்த்து
வாய் திறந்து
வார்த்தை கோர்த்து
சொல்ல வேண்டுமா
காதலை.

விழி பேசாததையா
மொழி பேசிவிடப் போகிறது.

உயிர்க்குரல் பாடும்
ஒரு ராகம் -  நீ
கேட்பாயா.

மனதினை தந்து
என் ஜீவன் - அதை
காப்பாயா.

விடுமுறை

மணிக்குயிலே

மூன்று நாள்
விடுமுறை
முடிந்து மீண்டும்
பாட வா.

நீ
வரும் வரை
கனம் தாங்காது
மனம் தூங்காது.

நல்ல கவிதை

உன்
பார்வை சொல்லும்
கவிதை தாண்டி

நல்ல கவிதையை
என்னால்
எழுதவே
முடியவில்லை.

ப்ரிய சகி

கன்னம் வழியும்
கண்ணீர் கூட
உன் பெயரே
எழுதுகிறது.

என்
கண்ணீரும்
உனக்கெனவே
அழுகிறது.

ப்ரிய சகி
ப்ரியம் தா சகி.

August 11, 2014

திரைப்பாடல் 2 - அம்மா அம்மா

 My Own lyrics for AMMA AMMA song from VIP movie

அம்மா அம்மா நீ வேண்டும் அம்மா
தெய்வம் கூட உனை வேண்டும் அம்மா
நிலவாய் வந்தாயே பிறையாய் தேய்ந்தாயே
நீல வானெங்கும் நிறைந்தே போனாய்

தாயே வரந் தருவாயே - என்றும் நெஞ்சில்
நிரந்தரம் நீயே

இங்கு எங்கேயும் கேட்கின்ற
என் கானம் நீ - நான்
எப்போதும் பார்க்கின்ற
வெண்மேகம் கொண்டாடும்
பொன் வானம் நீ

Stanza 1:
நீ தந்த பாசம்
பூ தந்த வாசம்
நெஞ்சில் நாளும்
நீங்காமல் வீசும்.

கனவோடு வாழ்ந்தாய்
களவாகிப் போனாய்
எங்கே சென்று
நான் தேடக் கூடும்.

ஏனோ எனை மறந்தாயே - காற்றில்
எங்கோ நீ கரைந்தாயே

தாயே நீயின்றி தண்ணீரும் தீயாகும்
வாழ்வும் தீவாகுமே

உன்னைக் காணாமல் கண்ணீரும் தள்ளாடும்
உள்ளம் திண்டாடுமே

Stanza 2:
அறியாத பிள்ளை
மலராத முல்லை
உன் மேல் கோபம்
எனக்கேதும் இல்லை

என் ஜீவராகம்
உன்னோடு சேரும்
கண்ணில் வேண்டாம்
கண்ணீரின் கோலம்

காலம் உயிர் பிரித்தாலும்
எந்தன் ஜீவன் உன்னுடன் வாழும்

இரவு வந்தாலும் விடிகாலை அது போகும்
எதுவும் நிலையில்லையே

நீயும் முன்னேறு தாயென்றும் உன்னோடு
நாளை உனதாகுமே

அம்மா அம்மா நீ வேண்டும் அம்மா
தெய்வம் கூட உனை வேண்டும் அம்மா
சுவாசம் போனாலும் பாசம் போகாதே
தேகம் போனாலும் நேசம் போகாதே

தாயே வரந் தருவாயே - கண்ணே
நீயே ஓர் வரந் தானே

ஒரு தெய்வம் தான் வந்து தாயானதே
ஒரு வேதம் தான் வந்து என் வீட்டில் எனக்கென்று சேயானதே.

திரைப்பாடல் 1 - ஏன் இங்கு நீ இல்லை

My own lyrics for PO INDRU NEEYAGA song from VIP movie...

ஏன் இங்கு நீ இல்லை
நான் இன்று நானில்லை
நேசம் உண்டானது
நெஞ்சம் துண்டானது
காலம் திண்டாடுது
காதல் வந்தாடுது.
லலலல லலலா.....

கண்ணாடி போல
அம்மாடி இருந்தேன்.
உன்னால நானும்
காத்தாடி ஆனேன்.

பூங்காற்று வந்து
பூ உன்னைத் தேடும்.
நீ வந்து சேர
புதுப்பாட்டு பாடும்.

கனவா நனவா
நான் காண்பது.
புயலா மயிலா
நீ என்பது.

மனதோடு சோகம்
மழையாகும் மேகம்
உனக்காக
உனக்காக
உயிர் கூட வேகும்
லலலல லலலா.....

August 2, 2014

ஆனந்தக் காற்று

விழி
வழி
வலி
தந்து விலகிப்
போகிறாய்.

நான் இளகிப்
போகிறேன்.

ஆனந்தக் காற்றே
என் மீது
வீச மாட்டாயா.

அழகிய ஊற்றே
என்னோடு
பேச மாட்டாயா.

August 1, 2014

நினைவுகள்

நீண்ட பயணங்களைவிட
நீளமானதாய்
இருக்கிறது
உன் நினைவுகள்.

பயணம்
என்றேனும்  முடியும்.

நினைவுகள்
எப்போதும் தொடரும்.

ஜீவமலர்

பாதமலர் நோக
நீ
நடந்து வருகையில்

நான் வாடி
நிற்கிறேன்

என்
ஜீவமலர் நோக.

பேசிக் கொண்டுதான்

உன்னோடு
பேசாமல் இருப்பதாய்
நினைக்காதே.

எப்போதும்
பேசிக் கொண்டுதான்
இருக்கிறேன்

எனக்குள்
இருக்கும்
உன்னோடு.

July 29, 2014

காதல் எனும் வேதம்

வரலாறு வாய்விட்டுச்
சொல்வது

வேதங்கள் நான்கு
என்று.

நான் மெய்தொட்டுச்
சொல்வது

வேதங்கள் ஐந்து
என்று.

காதல் என்பதும்
வேதம்தானே.

July 25, 2014

முழுநிலா

தரையில் இறங்கிய
இடியென விழுந்து

விழிகளுக்குள்
அமிலம் ஊற்றியது
அந்த
வேதனைச் செய்தி.

சத்தமில்லை.
யுத்தமில்லை.
என் நாளத்தில்
ரத்தமில்லை.

என்ன செய்தி?

முழுநிலா
மூன்று நாட்களுக்கு
தோன்றாதாம்.

திங்கள் வரை
திங்கள் வராதாம்.

மூன்றாம் பிறை
தோன்றும் வரை
சேர்ந்திருக்கும் என் கண்கள்
சோர்ந்திருக்கும்.

July 24, 2014

தாழம்பு

தூரத்தில் இருந்தாலும்
வாசத்தால் இழுக்கும்
தாழம்பு.

தூரத்தில் இருந்தாலும்
நேசத்தால் இழுக்கும்
நீயும் பூ.

பதிகம்

வர
வர

உன்னை நினைப்பதும்
என்னை மறப்பதும்
அதிகமாகிவிட்டது.

உனக்காக எழுதும்
கவிதையெல்லாம்
என் வரையில்
பதிகமாகிவிட்டது.

July 21, 2014

வார விடுமுறை

வார விடுமுறை என்பதே
கோர விடுமுறை
என்றாகிவிட்டது

உனைக்
காண முடியாதென்பதால்.

இதில்
வார விடுமுறையோடு
கூட விடுமுறை விட்டால்
என்ன செய்ய.

சூரிய ஒளியின்றி
சூரியகாந்தி
பூத்திருக்கும்.

நீ வரும்நாளை
எதிர்பார்த்துக்
காத்திருக்கும்.

July 20, 2014

நினைக்க

நடக்க
நடக்க
தூரம் குறையும்.

உன்னை
நினைக்க
நினைக்க
காதல் நிறையும்.

நினைவலை

உன் நினைவலைகளில்
நீந்தும் போதெல்லாம்
நான்
இல்லாமல்
இருக்கிறேன்.

இருந்தும்
இல்லை என்று
இருக்கிறேன்.

பாரசீக ரோஜா

பர்தா போட்டு வரும்
பாரசீக ரோஜாவே

பகலில் - நீ போகாதே
வெளியில்.

வெள்ளை நிலா
வந்துவிட்டது என்று
சூரியன் மறைந்துவிடும்.

சூரியனும் இல்லாமல்
சந்திரனும் இல்லாமல்
போனால்
தினம் சுற்றும் பூமிக்கு
தலை சுற்றும்.

கன்னிகை

காந்தத்தை விழியில் கொண்ட
கன்னிகையே

மீன் மிதக்கும்
உன் கண்ணால்
நான் மிதக்கிறேன்.

மீன் வாழ நீர் போதும்
நான் வாழ நீ போதும்.

பொறாமை

எவர் மீதும் எனக்கு
பொறாமையில்லை.

முதன்முறையாய்
உன் செல்போன் மீது
பொறாமை கொள்கிறேன்.

எந்நேரமும் உன்
கையில் இருக்கிறது.

காதோடு பேசுகிறது.
கன்னத்தோடு உரசுகிறது.

உன் தேன் தடவிய
இதழோடு
இழைகிறது.

உச்சமாய் - அமிர்தம் போன்ற
உன் திருவாய்
எச்சில் அதன்மேல்
படுகிறது.

செல்போன் செய்தது புண்ணியம்.
நானோ புண்ணியமற்ற பூஜ்யம்.

July 19, 2014

அதிசயம்

என்ன அதிசயமோ
எனக்குத் தெரியவில்லை.

நீ
எந்த ஆடை
அணிந்தாலும்
அந்த ஆடை
அழகாகிவிடுகிறது.

July 18, 2014

தேவதைக்காக ஓரு பிரார்த்தனை


தலையை குனிந்து வரும்
தாமரை
வாடலாமா.

ஆனந்தம் தரும்
ஸ்ரீ ராகம்
சோக கீதம்
பாடலாமா.

தேவமகள் இன்று
தேய்பிறையாய்
ஆகலாமா.

நலிவுற்றதால் முகம்
பொலிவற்று
போகலாமா.

மேகம் நோயுற்றதால்
தேகம் என்ற நீரூற்று
காயலாமா.

பகலில் வரும்
பெளர்ணமி நிலா
தேயலாமா.

இதையெல்லாம்
கண்டு என்மனம்
நோகலாமா.

இதயம் சிந்துகிறது
செந்நீர்.
இமையில் வழிகிறது
வெந்நீர்.

கருணையே வடிவான
திருவே!

நான் காதலிக்கும்
குருவே!

எந்தை வருக
எனதாருயிர் வருக

விசிறி கொண்ட
கையாலே
விசிறுங்கள்.

வினையாலே வந்த
வினையெல்லாம்
விரட்டுங்கள்.

மங்கையவள் நோய்தீர
மயிலிறகால் வருடுங்கள்.

தாய் போன்ற பெண்மையின்
நோய் தீர்த்து அருளுங்கள்.

நோய் நோய் படட்டும்.
உங்கள் ஆசியெனும்
தீ அதை சுடட்டும்.

பணிகிறேன் நான்
உங்கள் பாதம்.
அதுதானே என்றும்
எந்தன் வேதம்.

பாவை ஆகட்டும்
பழையபடி.
படர்ந்து பூக்கட்டும்
பருவக்கொடி.

July 17, 2014

வெளிச்சப் பாதை

என் ஆகாயத்தில் வந்த
வெண்ணிலவே

வாசம் சிந்தும்
பெண்ணிலவே

நீ காட்டும்
வெளிச்சப் பாதையில் தான்
எந்தன் வாழ்வு
நகர்கிறது.

மரங்கள்

மரங்களை வெட்டுவது
பாவம்

என்றிருந்த எனக்கு
நேற்று வந்தது
மரங்களின் மீது
கோவம்.

இப்படியா உன்னை
மறைத்துக் கொண்டு
வளர்ந்து நிற்கும்?

கோடாலி
எங்கே விற்கும்?

July 16, 2014

நிமிடங்கள்

நின்று போன லிப்டுக்குள்
உன்னோடு

நின்று பறந்த வேளையில்

நின்று போயின - என்
நிமிடங்கள்.

July 13, 2014

இதயக் கணவாய்

இதுநாள் வரைக்கும்
கனவாய் இருந்தவள்
எப்படியோ
என் இதயக்
கணவாய் வழியே
புகுந்துவிட்டாய்.

புன்னகை செய்து
முற்றுகை செய்தாய்.

இனி
என் மனதேசம்
உன் மொழி பேசும்.

என்ன வேலை

உன்னைத்தான்
படைத்து முடித்துவிட்டானே
இனி பிரம்மனுக்கு
என்ன வேலை.

பிரம்மா - நீ இரு
சும்மா.

வானவில்

உன்னை
வரைந்து முடித்துவிட்டு
பிரம்மன்
மிச்சமிருந்த வண்ணத்தை
கீழே சிந்தினான்.

அதுவே
வானவில் ஆனது.

தாரகை

பேசுகின்ற ஓவியமே - நான்
பாடுகின்ற காவியமே

திருமகள் என்று - பொன்
தூரிகை கொண்டு
தாரகை உன்னைத்
தீட்டினானோ.

அற்புதம் நீ என்று
அமிர்தம் தான் கொண்டு
உனக்கு உயிர்
ஊட்டினானோ.

நினைவுகள்

நீ இல்லாமல் கூட
வாழ்ந்திடுவேன்
தன்னால்.

உன் நினைவுகள்
இல்லாமல்
வாழவே முடியாதடி
என்னால்.

July 12, 2014

மனமில்லை

இருந்தவரைக்கும்
எடுத்துக் கொடுத்துவிட்டேன்
உன்னிடம்
என் மனதை.

இனி
கொடுப்பதற்கு
மனமில்லை.

உனக்கேன்
உன் மனதை
கொடுப்பதற்கு
மனமில்லை.

கதவைத் திற

ஊருக்குள் வசிக்கின்ற
உன்னதமே

உயிர்த் தீவுக்குள் வசிக்கின்ற
சுடரே

உன் இதயக்
கதவைத் திற.

என் காதல்
காற்று வரட்டும்.

புனிதம்

கங்கையில் குளித்தாய்
நீ புனிதம் அடைந்தாய்.

யமுனையில் குளித்தாய்
நீ புனிதம் அடைந்தாய்.

காவிரியில் குளித்தாய்
நீ புனிதம் அடைந்தாய்.

கடலில் குளித்தாய்
கடல் புனிதம் அடைந்தது.

கணைவிழி

அழகைவிட அழகான
அழகே...

ஒரு நொடியில்
ஓராயிரம் கவி
சொல்கிறது
உன்
கணைவிழி.

பார்வையால்
தீண்டிவிட்டுப் போகிறாய்.

பரவசம்
தூண்டிவிட்டுப் போகிறாய்.

பார்வை

எத்தனை ஜென்மம்
எடுத்து வந்தேனோ

எத்தனை யுகம்
காத்து நின்றேனோ

நீ என்னை நோக்க.

நான் உள்ளே பூக்க.

July 10, 2014

காகிதம்

நீ
கை துடைத்து
கசக்கி எறிந்த
காகிதம் கூட

எனக்கு
கவிதையாகிறது.

அடைமழை

அடித்துப் பெய்கிறது
அடைமழை.

அலுவலகம் விட்டு
அன்பே - நீ எனக்கு
முன்பே நகர்கிறாய்
வீடு நோக்கி.

இருவரும் நனைகிறோம்

நீ தண்ணீரிலும்
நான் கண்ணீரிலும்.

வெறுப்பு

இருட்டில்
தலைகுனிந்து
தரை பார்த்து
எதிர்வந்த
என்னை தவிர்த்து
நீ போனாய்.

நான் தவித்துப்
போனேன்.

உலகின்
ஒட்டுமொத்த
வெறுப்பு
வெருட்டென்று
இருட்டின் மீது
வந்தது எனக்கு.

July 9, 2014

நான் வரைந்த ஓவியம்

உன்னை கண்ட
பின்புதான்
என்னை கண்டு
கொண்டேன்.

என்னை கண்ட
பின்புதான்
காதல் கண்டு
கொண்டேன்.

ஏன் ராணி என்னை நீ
ஏங்கச் செய்கிறாய்.

கண்ணீரை கண்ணிலே
தேங்கச் செய்கிறாய்.

நான் வரைந்த ஓவியம்
காணவில்லை உன் திருமுகம்.

ஓவியத்தில் உயிருமில்லையே
ஓவியனில் உணர்வுமில்லையே.


July 8, 2014

காத்திருக்கும் கவிதை

எப்போது
நீ படிப்பாயோ
என்று

இதயம் படபடக்க
இமைகள் சடசடக்க
எதிர்ப்பார்ப்போடு
காத்திருக்கிறது

உன் பிறந்தநாளுக்காக
நான் எழுதிய
கவிதை.

என் உயிரிலிருந்து
வளர்ந்து நிற்கும்
பூவிதை.

July 7, 2014

வாராயோ

வாராயோ பூங்கிளி
கூறாயோ தேன் மொழி

நீ இல்லாமல் நானுமே
நீலமில்லா வானமே

நான்
காண்பதெல்லாம் மாயமே
காலமெல்லாம் சாயுமே

காற்று கூட தேயுமே
உயிர்
கூடு விட்டு பாயுமே

நான் தினம் வாடினேன்
உன் முகம் தேடினேன்.

பிரசவ வலி

முல்லை பூவின்
மகளே

உன்
இரு இதழ்களுக்கிடையே
புன்னகை பிறக்காதா

என்று
பரிதவிக்கிறேன்
பிரசவ வலியோடு.

July 6, 2014

மடிக்கணிணி

என்ன தவம்
செய்ததோ
அந்த மடிக்கணிணி.

எப்போதும் உன்
கையோடு
கண்ணோடு

முப்போதும்
உன்னோடு
வசிக்கிறது.

தவமே செய்யாமல்
மோட்சம் ருசிக்கிறது

உன்
விழி பட்டு
விரல் தொட்டு.

மலர்க் கண்காட்சி

மலர்க் கண்காட்சிக்கு
போயிருந்தேன்.

எல்லாப் பூக்களும்
இருந்தன.

நீ மட்டும்தான்
இல்லை.

என் பேனா

உன்னை நினைத்து
கவிதை எழுதத்
தொடங்கும் முன்பே

எழுதி முடித்துவிடுகிறது
என் பேனா.

இதை
என் திறமை என்பேனா?
உன் மகிமை என்பேனா?

படைப்பு

ஆகாயம்
காற்று
கடல்
பூக்கள்
நதி
தீ

எல்லாம் படைத்தும்
பூரணமாகவில்லை
பூமி.

உன்னைப் படைத்தான்.

பூமி பூரணமாயிற்று.
அதன் குறை
ஜீரணமாயிற்று.

காதல் தீவினிலே

என்
காதல் தீவினிலே
பெண்ணே
உன் ஊர்வலம்.

எனை ஏற்றி
ஊர் செல்ல
கண்ணே
உன் தேர் வரும்.

அந்த நாள் வரும்.

ஞாபகச்சிமிழ்

உன்னைப் பற்றிய
ஞாபகங்களால்
மூட முடியாமல்
நிரம்பி
நிரம்பி

நிறைந்து வழிகிறது
என் ஞாபகச்சிமிழ்.

கண்பட்டதனால்

என்முன்
நீ தென்பட்டதனால்

என்மேல் உன்
கண்பட்டதனால்

மண் விட்டதை
விண் தொட்டது
நான்.

பண் கொட்டுது
காண்.

July 4, 2014

மெளனமே காதலாக

நீயும் சொல்லாமல்
நானும் சொல்லாமல்
மெளனமாய் நிற்பதால்

இருவருக்கும் நடுவே
மெளனமாய் நிற்கிறது

மெளனமே காதலாக.

உன் நினைவு

நிமிடங்கள் கரைந்தாலும்
வருடங்கள் விரைந்தாலும்

வானம் சென்றாலும்
காற்று நின்றாலும்

பூமி புதைந்தாலும்
பூக்களெல்லாம் எரிந்தாலும்

பிறை நிலா உடைந்தாலும்
பிரபஞ்சம் கிழிந்தாலும்

மழைத்துளி மறைந்தாலும்
உயிர்த்துளி உலர்ந்தாலும்

உன்
நினைவு
நீங்காதடி.

தாமரை


கண்மூடி
கடலில் பூத்த

 
வெண்தாமரை - இந்த
பெண்தாமரை.

பூ

மடியில் இருக்கும்
பூவைப் பார்க்கிறது

 
படியில் இருக்கும்
பூ.

July 3, 2014

தென்றல்

உன்னை
வருடும்
தருணம்

தென்றல்
திண்டாடிப் போகிறது.

தாரகை உன்னைத்
தீண்டியதை

திருவிழாவாய்
கொண்டாடிப் போகிறது.

மொழி

இன்றுவரை
புரியவில்லை எனக்கு

உன்
விழி பேசும்
மொழி.

விழியால் பேசாமல்
மொழியால் பேசு
கனிமொழியே.

July 2, 2014

பிறந்த நாள் கவிதை

ஆனந்தமே
பரமானந்தமே
என்று

ஆனந்தக் கூத்தாடுகிறது
என் உள்ளம்.

புதிதாய் ஓரு
கவிதை
வந்ததால்
உள்ளமெல்லாம்
மகிழ்ச்சி வெள்ளம்.

காரணமின்றியா
கவிதை பிறந்தது?

கவிதை பிறந்ததால்
கவிதை பிறந்தது.

கண்டுகொண்டேன்

கைவீசும் காற்றே

உந்தன்
கண் கண்டதால்
கண்டறியாதன
கண்டேன்.

உன்னை
தேடிக் கண்டுகொண்டேன்.
எனக்குள்
தேடாமல் கண்டுகொண்டேன்.

மந்திரப்பாவை

சுந்தரப்பாவையே
நீ என்ன
மந்திரப்பாவையா.

வண்டு விழியால்
வசியம் செய்கிறாய்.
வலியே இல்லாமல்
இதயம் கொய்கிறாய்.

ஆச்சரியம்

இரும்புக் கோட்டையாய்
இருந்த என்
இதயத்தில்
எப்படித்தான் நீ
நுழைந்தாயோ.

நினைக்க நினைக்க

ஆச்சரியம் - என்மீது
பூச்சொரியும்.

மூச்சுக்காற்று

உன்
மூச்சுக் காற்றை
சுவாசித்துதான்
காலந்தள்ளுகிறது
காற்று.

தட்டி எழுப்பியவள்

ஏனோதானோ என்று
நான்
எழுதிக் கொண்டிருக்க

எனக்குள்
உறங்கிக் கிடந்த
கவிதையை தட்டி எழுப்பியவள்
நீதானடி.

July 1, 2014

திருமுகம்

திருமுகம் காணாமல்
இரு தினம் போனது.

முன் தினம் கண்டதால்
மூச்சு பிழைத்தது.

பெண் தினம் காணாது
கண் தினம் தேடுது.

கண் தினம் காணாது
என்னுயிர் வாடுது.

June 30, 2014

நிலா கவிதை - 5

நீ
நிமிர்ந்து
பார்ப்பதில்லை
என்ற வருத்தத்தில்

மாதம் ஒருமுறைதான்
முகங்காட்டுகிறது
முழுநிலவு.

உறங்காவில்லி

அவன் பெயர்
உறங்காவில்லி.
ஊரறிந்த புள்ளி.

பிறப்பால் மல்லன்.
குணத்தால் நல்லன்.

அவன் மனைவி
பொன்னாச்சி.
அன்று மலர்ந்த மல்லி.

கணவனை தினம்
தொழும் கற்புக்கரசி.
கடவுளை மனம்
தொழும் கடும் தவசி.

இருவரும்
உடலால் ஈரங்கம்.
உயிரால் ஓரங்கம்.
வாழ்ந்தது ஸ்ரீரங்கம்.

உறங்காவில்லி
அவளை மணஞ்செய்ய
பார்க்கவில்லை
கோத்திரம்.
பார்த்தது அவள்
நேத்திரம்.

அந்தப் பெண்ணழகு
கொண்டிருந்தாள்
அப்படியோர்
கண்ணழகு.

முகம் சந்திர அம்சம்.
கண்கள் சூரிய வம்சம்.

மலர்கள் காத்திருக்கும்
அவள் வரும் வழி பார்த்து.
மலைப்பில் வேர்த்திருக்கும்
அவள் கரு விழி பார்த்து.

விண்மீனும்
மண்மானும்
மருண்டோடும்

அவள்
கண் பார்த்து.
வெட்கத்தால்
தலைகுனிந்து
மண் பார்த்து.

எப்போதோ நடந்த கதை
இப்போது ஏன்
சொல்லவேண்டும் இதை.

வினா வரும்.
வியப்பு தரும்.

நான்
உன் கண் பார்க்கையில்
நீ
என் கண் பார்க்கையில்
நான் அதில் தோற்கையில்
கற்பனை எழும்.

நீ பொன்னாச்சியோ?
நான் உறங்காவில்லியோ?

பேசாமல்

பேசாமல்
பேசிக் கொள்கின்றன
நம் கண்கள் - பல
சங்கதி.

பேசாமல்
நாம் பேசிக் கொள்ள
நீ சம்மதி - எனக்கது
நிம்மதி.

நீயம்மா

வேதம் நீயம்மா
நாதம் நீயம்மா

வானம் நீயம்மா
கானம் நீயம்மா

பாடல் நீயம்மா
தேடல் நீயம்மா

மலரும் நீயம்மா
மணமும் நீயம்மா

மாலை நீயம்மா
மலர்சோலை நீயம்மா

ராகம் நீயம்மா
மேகம் நீயம்மா

தென்றல் நீயம்மா
தேனும் நீயம்மா

கடலும் நீயம்மா
அலையும் நீயம்மா

காற்றும் நீயம்மா
கனவும் நீயம்மா

வாசம் நீயம்மா
சுவாசம் நீயம்மா

இரவும் நீயம்மா
விடிவும் நீயம்மா

நேற்றும் நீயம்மா
நாளை நீயம்மா

இதயம் நீயம்மா
உதயம் நீயம்மா

நிலவும் நீயம்மா
நினைவும் நீயம்மா

வாழ்வும் நீயம்மா
வளமும் நீயம்மா

உறவும் நீயம்மா
உயிரும் நீயம்மா

நெஞ்சம் நீயம்மா
தஞ்சம் நீயம்மா

கோயில் நீயம்மா
தெய்வம் நீயம்மா

காதல் நீயம்மா
கவிதை நீயம்மா

ஜீவன் நீயம்மா - அதில்
வாழ்வேன் நானம்மா.

நினைவுச்சின்னம்

தாஜ்மகால் காதலின்
நினைவுச் சின்னமாம்.

காதல் தெரியாதவர்கள்
பேதை போல் பேசுகிறார்கள்.

நினைவுச்சின்னம் என்பது
காலம் விட்டு
கண்ணை விட்டு
மறைந்தவைகளுக்கு
எழுப்பப்படுவது.

என் தாஜ்மகாலே

நீ நினைவுச்சின்னம்
அல்ல
நான் நேசிக்கும் அன்னம்.


June 29, 2014

கடல்நீர்

உன்
தாமரைப் பாதங்களை
நனைக்கவில்லை என்று
கண்ணீர் சிந்துகின்றன
கடல்கள்.

கண்ணீர் கலந்து
கண்ணீர் கலந்து
கடல்நீரெல்லாம்
உப்பானது.

இயற்கையிலேயே
கடல்நீரென்பது
உப்பானது  - என்பது
தப்பானது.

June 28, 2014

காரணம்

வானில் நீலமில்லை
வாழ்வும் நீளவில்லை

காற்றில் ஈரமில்லை
கருமேகம் தூறவில்லை

வானவில்லில் வண்ணமில்லை
வானில் வர எண்ணமில்லை

கடலில் அலையில்லை
கரையோரம் அவையில்லை

நிலவில் பிறையில்லை
நிலத்தில் தரையில்லை

காலம் ஓடவில்லை
கானம் பாடவில்லை 

நிமிடங்கள் நகரவில்லை
வருடங்கள் வளரவில்லை

இமைகள் அசையவில்லை
இயங்க இசையவில்லை

இதயம் இயங்கவில்லை
இறக்க தயங்கவில்லை

இரவில் இரவில்லை
பகலில் பகலில்லை

இயற்கை இதமாயில்லை
எதுவும் இயல்பாயில்லை

உடம்பில் உயிரில்லை
உயிரில் உயிரில்லை

இதற்கெல்லாம்
காரணம்

என்னருகில்
என்னுயிரே
நீ இல்லை.

June 24, 2014

ஒரு வார்த்தை

திருவே

ஒரு வார்த்தைதான்
பேசிக் கொண்டோம்
உன்னோடு நானும்
என்னோடு நீயும்.

அதிலேயே
நூறாயிரம் வார்த்தைகள்
பேசி
ஓராயிரம் ஆண்டுகள்
வாழ்ந்ததாய்
அடைகிறது நிறைவை
என் உயிர்ப் பறவை.

மெல்ல ஒரு அம்பெடுத்து

அர்ஜூன வில்லிலிருந்து
அதிர்வோடு புறப்பட்ட
அம்பென
தாக்குகிறது

முகம் உயர்த்தி
முடி விலக்கி
விழி நகர்த்தி
இமை தளர்த்தி
பாவை நீ
பார்க்கும்
பார்வை.

அம்புப் படுக்கையில்
வீழாது
அன்புப் படுக்கையில்
வீழ்கிறேன் நான்
பீஷ்மனென.

நீ
சிலைபோல் நிற்பதா
சிகண்டியென.

June 21, 2014

தியானம்

தினம் செய்யும்
தியானத்தில்
தொலையாத நான்

மனம் கொய்யும்
உன்
மோனப்பார்வையில்
தொலைந்து போகிறேன்.

தேகத்தில் வாழும் எனக்கு
தேகம் தாண்டிய
அனுபவம் தருகிறது

திருப்பாவை உந்தன்
ஒரு பார்வை.

அடம்

அதிகமாய்
இடம் கொடுத்துவிட்டேன்
என் கண்களுக்கு.

அதனால்தான்
அவை அடிக்கடி
அடம் பிடிக்கின்றன

மீண்டும் மீண்டும்
உன்னை
காண வேண்டும்
என்று.

கவிதை நீ

என் கவிதைகள்
உன் கண்ணில்
படுகிறதோ
இல்லையோ

என் கண்ணில்
எப்போதும்
படுகிற கவிதை
நீ

June 19, 2014

வலி

உன் வருகைக்காக
காத்திருந்து

நகம் கடிக்கும்
நேரத்தில்
யுகம் கடக்கும்
வலி காண்கிறேன்.

நீயோ.......

பூ வைக்கும் பூவே
புன்னகைக்கும் தீவே

நடமாடும் நந்தவனமே
நான் பாடும் கீர்த்தனமே

வாசமுள்ள பூங்காற்றே
வசப்படுத்தும் தேனூற்றே

கார்கால பூ வசந்தமே
கண்டிராத தேவ சொந்தமே

அன்னம் வியக்கும் அன்னமே
பொன்னும் வியக்கும் சொர்ணமே

செந்தாழம்பு திருமேனியே உன்
செவ்விதழ் தேடி வரும் தேனீயே

கண்ணை விட்டு
விலகிடாத ஓவியமே

நெஞ்சம் விட்டு
நீங்கிடாத காவியமே

நீயோ
மண்ணை விட்டு
பூமி வந்த தாமரை

நானோ
யாருமற்று தள்ளி
நிற்கும் தேய்பிறை

நீயோ
வானம் விட்டு
வையம் வந்த தேவதை

நானோ
பாலைதன்னில் சிந்திச்
செல்லும் வான்மழை

கலகம்

நண்பர்கள்
கவிதை கேட்டு
கலகம் செய்தார்கள்.

உன்
பெயர் சொன்னேன்.

கவிதை பிறந்தது
கலகம் மறைந்தது.

June 12, 2014

கவிதையும் காதலும்

தேவன் தந்த
தேவதையே!

விளையாட்டாய்த்தான்
ஆரம்பித்தேன்
உன்னை நினைத்து
கவிதை எழுத.

நாளாக
நாளாக
கவிதை பிறந்தது.

நானே அறியாமல்
காதல் பிறந்தது.

விளையாட்டு வினையானது
வினையானது சுகமானது.

நீயென்னை
கண்ட நாள் முதலாய்
நிழல்கூட
என்னோடு வருவதில்லை.
நிலவுகூட
கண்ணுக்குத் தெரிவதில்லை.

இதயம் இடம் மாறிவிட்டது
இலை போல் தரை மோதிவிட்டது.

என்ன சொல்லி
நானெழுத.
எப்படி உன்
மனமறிய.

கவிதையை சொல்லி விட்டேன்
காதலை சொல்லாமல் விட்டேன்.

இப்போதைக்கு
என்னோடு
இருப்பதெல்லாம்

சொல்ல முடிந்த கவிதையும்
சொல்ல முடியாத காதலும்.

June 10, 2014

சொர்க்கமே

ஊருக்குள் வசிக்கின்ற
புயலே

தேருக்குள் வருகின்ற
தென்றலே

சொல்லுக்குள் அடங்காத
சொர்க்கமே

விதவிதமாய்
வர்ணித்தாலும்
இன்னும் எவ்வளவோ
மிச்சமிருக்கிறது.
உன்னிடத்தில் அழகு
உச்சமிருக்கிறது.

பள்ளிகொண்ட பெருமாளாய்
படுத்திருந்த என் நெஞ்சம்
துள்ளிக்கொண்டு தைதை ஆடுகிறது.
துளித்துளியாய் கவிதை பாடுகிறது.

விடுமுறை

நீ
எப்போதெல்லாம்
விடுமுறை எடுக்கிறாயோ

அப்போதெல்லாம்
விடுமுறை எடுத்துக் கொள்கிறது
என் வாழ்க்கை.

இதயத்தாமரை

எத்தனையோ
மலர்களைச் சூடுகிறாயே...

எப்போது
சூடுவாய்
என் இதயத்தாமரையை.

சூடி என் உயிருக்கு
சுடர் கொடு
சுடர்க் கொடியே.

June 8, 2014

வானவில்

ஓரே
வண்ணம் கொண்ட
வானவில்
என்றுதான் தோன்றுகிறது

உன்
மருதாணி அணிந்த
மலர்க்கரம்
பார்க்கும்போது.

May 26, 2014

மகரந்த மாற்றம்

உன்
பார்வை
படும்போதெல்லாம்

கண நேரத்தில்
என்னுள் நேர்ந்திடும்
மகரந்த மாற்றம்
விவரிக்க

வார்த்தைகளே இல்லை
என்னிடம்.

அந்நேரம்

புலன்கள் அடங்கிட
ஊமையாகிறேன்
பூமியில் அசையாத
ஆமையாகிறேன்.

May 23, 2014

வியர்வைத்துளி

நீ
கடந்து போகையில்
என் மீது தெறித்த
உன் வியர்வைத் துளியால்

கங்கையில் குளிக்காத
தாபம் தீர்ந்தது.

ஜென்ம ஜென்மாந்திர
தாகம் தீர்ந்தது.

முக்காலம்

என் இறந்தகாலம்
அனுபவங்கள்.

என் நிகழ்காலம்
தேடல்கள்.

என் எதிர்காலம்
நீ.

பிரம்மா

படைப்புக் கடவுளான
பிரம்மாவுக்கு
கோயிலே கிடையாதாம்.
ஈசனின் கோபமாம்.
ஏதோ சாபமாம்.

உன்னைப் படைத்ததற்கே
ஓராயிரம் கோயில்
கட்டலாமே.

பூங்காற்று

பூங்காற்றே
அடிக்கடி வீசி

அவள் கேசத்தையும்
என் சுவாசத்தையும்
கலைக்காதே.

காதல் தீபம்

இராக்கால
வானம் போல
இருண்டு கிடக்கிறது
என்
மனக் குகை.

நீ வந்து
காதல் தீபம் ஏற்று.
காரிருளை மாற்று.

May 22, 2014

காலம் 1

சதா சர்வகாலமும்
உன்னையே
நினைத்துக் கொண்டிருக்கிறேனாம்

என்னிடம் சொல்லிவிட்டு
கன்னம் கிள்ளிவிட்டு
கடந்து போகிறது
காலம்.

கண்டு கொண்டேன்

பூக்களாலும்
பூகம்பம் வெடிக்கும்.
புயல் அடிக்கும்.
பிரளயம் நடக்கும்.

உன்னை
கண்ட பின்பு
கண்டு கொண்டேன்.

May 18, 2014

சுவாசக் காற்று

மரமாய்
பிறந்திருந்தால்
உன் சுவாசக் காற்று
என் சுவாசக் காற்றாய்
ஆகியிருக்கும்.

என்ன செய்ய...

அவசியமில்லாமல்
ஆணானேன்
வீணானேன்

May 9, 2014

கதவு

கதவு தட்டும் காற்றே...
திறந்திருக்கும் கதவு தாண்ட
உனக்கெதற்கு அனுமதி?

April 21, 2014

தேவ மின்னல்

தேவ மின்னல்
திரும்பி வருமா...

பாதை பார்த்தபடி
பார்வை பூத்தபடி
பழியாய் கிடக்கிறது
என் வானம்.

வரவில்லை

இன்றுவரை
வரவில்லை.

இனி வருவதற்கு
வாய்ப்பு உண்டா
தெரியவில்லை.

வராதது ஏனோ
அறியவில்லை.

காணாது
வாடிக் கிடக்கும்
உயிர்ப்பறவை

தேடிப் பறந்திடுமோ
புரியவில்லை.

தேவனுக்கே
வெளிச்சம்.

நீ என்
வாழ்வில் வந்த
அனிச்சம்.

April 10, 2014

நான்

நீரற்ற குளம்
தாண்டும்
தாகங் கொண்ட
பறவையாய்...

நீயற்ற இடம்
தாண்டும்
நான்.

நிலா கவிதை 4

நிலவில்லாத
நாளெல்லாம்
பூமிக்கு
அமாவாசை.

நீயில்லாத
நாளெல்லாம்
எனக்கு
அமாவாசை.

April 6, 2014

ரோஜா

ரோஜாப் பூவை
செடியில்
பார்த்ததுண்டு.

சுடியில்
பார்த்தேன் இன்று.

April 2, 2014

அகராதி

இன்னமும்
தேடிக் கொண்டிருக்கிறேன்

உன்
விழிக்குறிப்பை
மொழிபெயர்க்கும்
அகராதியை.....
 

எரிச்சல்

மின்தூக்கியில்
உன்னோடு
வரும்போது
எரிச்சலாய்
இருக்கிறது

ஏன்
மூன்றாம் மாடியில்
உட்கார்ந்திருக்கிறோம்
என்று.

March 29, 2014

நிலா கவிதை 3

வீண்தான்.

நிலவில்லாத
வானும்.

நீயில்லாத
நானும்.

March 28, 2014

ஒரப்பார்வை

என்னுள்
தாமரையாய் பூத்தவளே.

நான்
தாமதமாய் பார்த்தவளே.

உனக்கென்ன
ஒரப்பார்வையில்
கொன்றுவிட்டு போவாய்.

எமனை நான்
வென்றுவிட்டு வாழ்கிறேன்.

கல்நெஞ்சக்காரி

216 தமிழ்
எழுத்துக்கள்.

26 ஆங்கில
எழுத்துக்கள். 

இதில் ஏதேனும்
ஒன்றையாவது
பேசக்கூடாதா
என்னிடம். 

போடி - என்
உள்நெஞ்சம் புரியாத
கல்நெஞ்சக்காரி.

நீயின்றி...

நீரின்றி அமையாது
எந்த உலகும்.

நீயின்றி அமையாது
எந்தன் உலகம்.

நிலா கவிதை 2

அலுவலகம் விட்டு
9.40க்கே
நிலா
நகர்ந்து போயிற்று.

என் வானம்
இருண்டு போயிற்று.

நிலா கவிதை 1

மஞ்சள் நிலா

இன்று
வானில் வரவில்லை.

நேரில்
வந்திருக்கிறது.

March 25, 2014

வாழ்க மின்தூக்கி

அவளை தனக்குள்
சுமந்து
மிதந்து வந்தது
மின்தூக்கி.

கூடவே
அவளை நெஞ்சில்
சுமந்து நிற்கும்
நான்.

(மின்தூக்கி = Lift)

March 24, 2014

திரும்பிய உயிர்

என் உயிர்
வந்துவிட்டது.

எனக்கு உயிர்
வந்துவிட்டது.

March 20, 2014

வார விடுமுறை

வாரத்தின்
இறுதி நாட்கள்
வந்துவிட்டால்...

எல்லோருக்கும்
கொண்டாட்டம்.

எனக்கு மட்டும்
திண்டாட்டம்.

இரண்டு நாட்கள்
உன்னை
பார்க்க முடியாதே...

வெறுமை

வெறுமை.

நீ இல்லாத
உன் இடத்திலும்.

அதை பார்க்கும்
என் இதயத்திலும்.

March 14, 2014

ஃபேஸ்புக்கும் டாஸ்மாக்கும்

ஃபேஸ்புக்கும் டாஸ்மாக்கும்
ஒட்டிப் பிறக்காத
இரட்டை குழந்தைகள்

முகங்கள் வேறு
குணம் ஒன்று

இரண்டிலும் ஆர்வம்
சொல்லிவிட்டு
வருவதில்லை என்பதே
சுவாரஸ்யம்

நேரம் திருடுவது
ஒன்றின் லட்சியம்
பணம் பறித்தல்
இன்னொன்றின்
லட்சியம்

இரண்டின் ராஜாங்கத்திலும்
வயது வரம்பில்லை

உள்ளே நுழைதல்
முதல் நிலை
தன்னை மறத்தல்
இறுதி நிலை

இரண்டுமே
கால தேச தூர
வர்த்தமானங்களை
கடந்து நிற்பவை

இவ்விரண்டில் நுழைந்துவிட்டால்
எவர் பேச்சும்
செவியேறாது

இரண்டின்
தேசிய குணமும்
சண்டைதான்

இவ்விரண்டில்
புதைந்துவிட்டால்
மீளுதல் கடினம்

இரண்டிலும்
நட்பு எண்ணிக்கை
அதிகம்

இரண்டுமே
மனம் சார்ந்து
நேர்ந்தாகும்
அஞ்ஞான விபத்து

இரண்டிலும்
வாய்ச்சண்டைக்கு
குறைவில்லை

இரண்டோடும்
உறவாட
விரல்கள் அவசியம்

இரண்டிற்கும்
விடுமுறை என்றால்
மானுடம் ஸ்தம்பிக்கும்

இரண்டுமே
சமதர்மம் உலாவும்
சன்மார்க்க தளங்கள்

என்ன வேறுபாடு?

ஒன்று
உடல் உருக்கும்
மற்றொன்று
மனம் பறிக்கும்

(Inspiration: கவிஞர் வைரமுத்து எழுதிய 'காதலும் மரணமும்' என்கிற கவிதை)